அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு அனைவரும் ஒரே அரங்கில் ஒன்றிணைவது அவசியம் - இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவி எதற்காக பயன்படுத்தப்பட்டது? : ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 3, 2020

அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு அனைவரும் ஒரே அரங்கில் ஒன்றிணைவது அவசியம் - இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவி எதற்காக பயன்படுத்தப்பட்டது? : ருவன் விஜேவர்தன

(நா.தனுஜா)

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியிடத்தில் பெருமளவான அதிகாரங்கள் உள்ளன. அதேபோன்று அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. இத்தகைய மிகவும் பலம் வாய்ந்த சக்தியை எதிர்ப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளடங்கலாக நாமனைவரும் ஒரே அரங்கில் ஒன்றிணைவது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். 

ஐக்கிய தேசயக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சுகாதாரப் பிரிவினர் ஒரு விதமாகவும் பாதுகாப்புப் பிரிவினர் வேறொரு விதமாகவும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். 

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று இராணுவத்தினர் கூறுகின்றனர். எனினும் ஒரு வாரத்தில் எவ்வித அறிகுறிகளும் தென்படாவிட்டால் அவர்களை வீடுகளுக்கே அனுப்பி வைக்க முடியும் என்று சுகாதாரப் பிரிவினர் கூறுகின்றனர். இவற்றில் எதனை நம்புவது என்று தெரியவில்லை. எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு சரியான நடைமுறையை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.

களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் வழங்குகின்ற தகவல்களின்படி அங்கு நிலைவரம் மிகவும் மோசமாக இருக்கின்றது. அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு 5000 ரூபாவை வழங்கவில்லை. அல்லது தமக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரமே அந்த நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் உணவை பெறுவதில் கூட பெருமளவான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே இது விடயத்தில் அரசாங்கம் மக்களை முன்னிறுத்தி சிந்திப்பதுடன், அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்கு சுகாதாரத் துறைக்கு சுமார் 20 பில்லியன் ரூபா நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பான அமைச்சு என்பவற்றுக்கு சுகாதார அமைச்சை விடவும் அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றிலிருந்து அரசாங்கம் எதற்கு முக்கியத்துவம் வழங்குகின்றது என்பது வெளிப்படுகின்றது.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிடப்பட்ட கருத்தைப் பெரிதும் வரவேற்கின்றோம். அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியிடத்தில் பெருமளவான அதிகாரங்கள் உள்ளன. அதேபோன்று அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. 

எனவே நாம் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சக்தியையே எதிர்க்க வேண்டியிருக்கிறது. ஆகவே நாம் மாத்திரமன்றி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளடங்கலாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே மேடையில் ஒன்றிணைவது அவசியமாகும். தற்போதைய அரசாங்கத்தின் வசமுள்ள அதிகாரங்களைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் நாட்டில் ஜனநாயகம் நிலைபெற்றிருக்குமா என்ற சந்தேகமே எழுகிறது.

அதேபோன்று இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த பலரும் அதற்காக இப்போது வருந்த ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அனைத்துக் காட்சிகளையும் ஒன்றிணைத்து வலுவானதொரு சக்தியை உருவாக்குவது அவசியமாகும்.

மேலும் கடந்த காலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சீனாவினால் பெருமளவில் நிதியுதவி வழங்கப்பட்டது. அந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். 

கடந்த மார்ச் மாதத்திலிருந்து புதிதாக செயற்கை சுவாசக் கருவிகள் எவையும் கொள்வனவு செய்யப்படவில்லை. பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படவில்லை. அவ்வாறெனின் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவி எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

அதுமாத்திரமன்றி "சுவசரிய" அம்பியூலன்ஸ் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை சுவாசக் கருவிகளைக் கழற்றி, அவற்றை வைத்தியசாலைகளில் பொருத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. அவ்வாறு செய்தால் அவற்றை மீண்டும் அம்பியூலன்ஸ் வண்டிகளில் பொருத்துவது இயலாத காரியமாகும். ஆகவே நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதியுதவி எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment