திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்ஸபுர பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் இன்று (21) வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த 50 வயதுடைய நபர் கடந்த இரண்டாம் திகதி தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டுக்கு விடுமுறையில் வந்ததாகவும் இதனையடுத்து 4ஆம் திகதி அவரை தனிமைப்படுத்தியதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட அவரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு PCR பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் 50 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 16 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
(எம்.எஸ். அப்துல் ஹலீம்))
No comments:
Post a Comment