கொரோனா பரவலின் 1ஆம், 2 ஆம் அலைகளுக்கு அரசாங்கமே முழு பொறுப்பு - பி.சீ.ஆர். பரிசோதனைக்கு பயங்கரவாதி போன்று அழைத்துச் செல்கின்றனர் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

கொரோனா பரவலின் 1ஆம், 2 ஆம் அலைகளுக்கு அரசாங்கமே முழு பொறுப்பு - பி.சீ.ஆர். பரிசோதனைக்கு பயங்கரவாதி போன்று அழைத்துச் செல்கின்றனர்

(செ.தேன்மொழி)

அரசாங்கம் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக முயற்சித்து வந்ததால் கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலை ஏற்பட்டிருந்ததுடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் கொண்டிருந்த அக்கறையின் காரணமாக தற்போது வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மூன்று தினங்களுக்குள் தொற்றாளர்கள் ஆயிரம் பேர் வரை அடையாளம் காணப்பட்டனர்.

இதனால் உடன் கம்பஹா மாவட்டம் முழுவதிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நானும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தோம், கடந்த மாதம் 7 ஆம் திகதியே நாங்கள் இந்த வேண்டுகோளை விடுத்திருந்த போதிலும், சுகாதார அமைச்சர் அதற்கு தற்போது அவசியமில்லை என்று எமது கோரிக்கையை நிராகரித்தார்.

எனினும் நாங்கள் எச்சரிக்கை செய்த போதே ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று பேலியகொடை கொத்தணி என்று ஒன்று உருவாகியே இருந்திருக்காது.

அரசாங்கம் ஆரம்பத்தில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக அக்கறை கொண்டு செயற்பட்டதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலை ஏற்பட்டது. பின்னர் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதில் அக்கறை செலுத்தி வந்ததனால் தற்போது இரண்டாவது அலையும் ஏற்பட்டுள்ளது.

எனினும் உரிய நேரத்தில் உரிய தீர்மானங்களை அரசாங்கம் எடுப்பதில்லை, அதன் காரணமாகவே வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகின்றது. 

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவு, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் தொடர்ந்தும் கடுமையாக உழைத்து வருகின்ற போதிலும், அரசியல் ரீதியிலான தலையீடுகளின் காரணமாகவே அதனை வெற்றி கொள்ள முடியாமல் உள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகளில் போதிய இட வசதிகள் இல்லை என்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டும் சிலர், அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைரஸ் பரவலுடன் தற்போது மனித நேயமும் இல்லாமல் போயுள்ளது. பி.சீ.ஆர். பரிசோதனைக்காக ஒருவரை அழைத்துச் செல்லும் போது அவரை ஒரு பயங்கரவாதியை அழைத்துச் செல்வதை போன்றே அழைத்துச் செல்கின்றனர்.

இதன் காரணமாக விசேட தேவையுடைய இளைஞன் ஒருவன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அவனது தாயை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதை அடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதற்கு பிரதான காரணம் எம்மிடம் மனித நேயம் இல்லாமல் போயுள்ளமையே.

No comments:

Post a Comment