குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உப பொலிஸ்மா அதிபர் நுவான் வெதசிங்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நுவான் வெதசிங்க தற்போது மேல் மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு உப பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் முன்னதாக மேல் மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு உப பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உப பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ்மா அதிபராக வேதசிங்க நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக குற்றவியல் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகள் குறித்து நேற்று (சனிக்கிழமை) பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் கவலை தெரிவித்திருந்தார்.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியூதீனின் சகோதரர் திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.
அவரின் விடுதலையின் பின்னணியில் அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறினார். விடுதலை செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கும் தற்போது கூறப்படும் விடயங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன.
இவர் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினரின் செயற்பாடுகளில் முரண்பாடான நிலைமை காணப்படுவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே நுவான் வெதசிங்க திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment