எஸ்.எம்.எம்.முர்ஷித்
கடந்த பத்தாம் திகதி வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் துறையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆழ்கடல் படகு காற்றின் வேகத்தினால் கடலில் மூழ்கியதுடன், அதில் பயணம் செய்த மூன்று பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் என வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை 10.10.2020 திகதி வாழைச்சேனையிலிருந்து தொழிலுக்காகச் சென்ற படகு கடலில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படுவதாக வானொலி செய்திகளைத் தொடர்ந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், ஞாயிற்றுக்கிழமை இரவு திருகோணமலைக்கு எதிராக வாழைச்சேனை கடற்பரப்பிலிருந்து 57 கிலோ மீட்டருக்கப்பால் இப்படகு ஆழ் கடலில் மூழ்கியுள்ளது.
இது தொடர்பாக படகின் உரிமையாளர் ஜே.எம்.பாயிஸ் நேற்று திங்கட்கிழமை இரவு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.
படகினதும் படகிலுள்ள பொருட்களின் மொத்த பெறுமதி 30 இலட்சம் ரூபாய் என்றும் படகில் சென்ற மூன்று பெரும் நேற்று மாலை கரை வந்து சேர்ந்ததாகவும் படகின் உரிமையாளர் ஜே.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
இப்படகு வாழைச்சேனை அல் அமான் படகு உரிமையாளர் சங்கத்தின் அங்கத்துவம் பெற்ற படகு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment