(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாக எமது நாடு சுயாதீனத் தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார். தற்போது அவரே ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். எனவே இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது என்ற தீர்க்கமான உத்தரவாதத்தை வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு செவ்வாய்கிழமை இணைவழி மூலம் இடம்பெற்றது. இதன் போதே இணை பேச்சாளர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.
கேள்வி: தற்போதை அரசாங்கம் எம்.சி.சி. ஒப்பந்தத்தில் ஒருபோதும் கையெழுத்திடப் போவதில்லை என்று பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்துள்ளது. இம்மாத இறுதியில் நாட்டுக்கு வரவுள்ளதாக கூறப்படும் அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதி இதனை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம் பிரயோகித்தால் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?
பதில்: 2009 இல் பிரித்தானியாவின் வெளிநாட்டலுவல்கள் செயலாளரும், பிரான்சின் வெளிநாட்டுறவுகள் அமைச்சரும் இலங்கைக்கு வந்து யுத்தத்தை நிறுத்துமாறு அழுத்தம் பிரயோகித்தனர். ஆனால் யுத்தம் நிறுத்தப்படவில்லையல்லவா? எனவே தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தமக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக வந்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாக இலங்கை சுயாதீனத் தன்மையும் இறையான்மையும் உடைய நாடு என்பதைக் காண்பித்தார்.
தற்போது அவரே ஜனாதிபதியாகவுள்ளார். எனவே இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது என்ற தீர்க்கமான உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment