பிள்ளையான் மிக விரைவில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார், காணி, நீர் நிலைகளை இஞ்சி இஞ்சியாக அளந்து வைத்திருப்பவர் - பிரசாந்தன் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

பிள்ளையான் மிக விரைவில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார், காணி, நீர் நிலைகளை இஞ்சி இஞ்சியாக அளந்து வைத்திருப்பவர் - பிரசாந்தன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுறை சந்திரகாந்தன், மிக விரைவில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று அந்தக் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

பிரசாந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சந்திகாந்தன் முதலமைச்சராக இருந்த காலத்தில் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக குறிப்பாக மேய்ச்சல் தரைக்காக 27311 ஹெக்டயர்களை ஒதுக்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் இஞ்சி இஞ்சியாக காணிகளையும் நீர் நிலைகளையும் அளந்து வைத்திருப்பவர் சந்திரகாந்தன் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

மேய்ச்சல் தரைக்கான காணிகள் ஒதுக்கப்படும் சூழலில் மாகாண சபைகள் கலைக்கப்பட்டதன் காரணத்தினால்தான் வர்த்தமானியில் பிரசுரிக்க முடியாமல் சென்றிருந்தது.

மயிலத்தமடு பகுதிக்கு நாங்கள் நேரடியாக சென்று நிலங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வந்தோம். அங்கு நிலங்கள் அபகரிக்கப்படவில்லை. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் எள்ளுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களையும் நாங்கள் அகற்றினோம்.

ஆனால் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இருந்த காலப்பகுதியில்தான், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினர் வந்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தும் அதனை அன்றிருந்த மாவட்ட அரசாங்க அதிபர் தடுத்த சம்பவமும் நடைபெற்றது.

பெரும்பான்மையினர் மீண்டும் காணிகளை பிடிப்பதற்கு இடம்கொடுத்தவர்கள் இவர்கள்தான். அன்று அந்த பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் இன்று வந்து சந்திரகாந்தன், பெரும்பான்மையினரை குடியேற்றியதாக கூறுகின்றனர்.

பெரும்பான்மையினர் கூறியதை சரியாக மொழி பெயர்ப்பு செய்யாத சூழ்நிலையிலேயே சந்திகாந்தன் காணிகளை கொடுத்ததாக குறிப்பிடுகின்றனர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment