(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்ததன் பின்னர் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் போது நவீன விஞ்ஞான பாதுகாப்பு பொறிமுறையை பின்பற்றுவது குறித்து சுகாதார அமைச்சு ஆலோசித்துவருகிறது.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் வைரஸ் நோய் தொடர்பான பேராசிரியர் மலிக் பீரிஸுக்கும் இடையில் சுகாதார அமைச்சில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதன்போது தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் அதன் பரவலைத் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்தோடு இரசாயன ஆய்வுகூட பரிசோதனைகளின் போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகளும் இரு தரப்பு கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்ததன் பின்னர் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் போது நவீன விஞ்ஞானப் பொறிமுறையை பின்பற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு மேலதிகமாக நவீன மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனை முறை ஒன்றை அறிமுகப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment