யாழில் நான்கு கொரோனா தொற்றாளர்கள், 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர், 40 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பு - அரசாங்க அதிபர் மகேசன் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

யாழில் நான்கு கொரோனா தொற்றாளர்கள், 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர், 40 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பு - அரசாங்க அதிபர் மகேசன்

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலில் யாழ். மாவட்டத்தில் நால்வருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏனைய மாவட்டங்களைப் போல் யாழில் தொற்று பரவாமலிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ். அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருவர் தொற்றுக்குள்ளான நிலையில், வவுனியா, நெடுங்கேணியில் வீதி புனரமைப்புப் பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு ஏற்பட்ட தொற்றில் இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், குறித்த இருவரும் தற்போது வவுனியா பகுதியில் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள்.

அவர்கள், யாழிற்கு வந்து சென்றதன் பிரகாரம் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் வரை 241 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேரை தனிமைப்படுத்தியிருக்கின்றோம். படிப்படியாக தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. தனிமைப்படுத்தப்படுவோர் பி.சி.ஆர். பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லையென உறுதியானதன் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள்.

கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இந்த தனிமைப்படுத்தல் எண்ணிக்கையானது மிகவும் குறைவடைந்து காணப்படுகின்றது. மருதங்கேணியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் தற்போது 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

அங்கு, நாளாந்த வைத்திய சேவைகள் வழமையாக இடம்பெற்று வருகின்றது அத்தோடு சுகாதாரப் பிரிவினர் குறித்த வைத்தியசாலையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள்.

இதனைவிட, வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தொடர்பாக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். ஏற்கனவே சீதுவ பகுதியிலிருந்து பேருந்தில் பயணம் செய்த ஒன்பது பேருடன் பேருந்து, சாரதி நடத்துனர் ஆகியோரும் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். அவர்களுக்கு விரைவில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, ஏனைய மாவட்டங்களைப் போல் யாழ். மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவாமலிருக்க சில முன்னேற்பாடுகளை மிக இறுக்கமாக செயற்படுத்த வேண்டியுள்ளது. எனவே, யாழில் கொரோனா தொற்று பரவாமலிருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதேபோல், நாளை வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன் விரைவில் யாழ். மாவட்ட கொரோனா செயலணிக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் ஒன்று கூடல்களைத் தவிர்த்து அநாவசிய பயணங்களைத் தவிர்த்து வீடுகளில் இருந்து தங்களுடைய செயற்பாடுகளை செய்யவேண்டும்.

அத்துடன், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைகருத்தில் எடுக்கவேண்டும் தற்பொழுது விரத காலங்கள் ஆரம்பித்துள்ளதன் காரணமாக ஆலயங்களுக்கு செல்வதை தவிர்த்து வீடுகளில் சுயகட்டுப்பாட்டுடன்இருந்து நீங்கள் வழிபாடு செய்வதன் மூலம் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment