பாடசாலை குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது லொரி மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியா நாட்டின் இநூகு மாகாணம் அவ்கு நகரில் உள்ள மழலையர் பாடசாலை குழந்தைகளை ஏற்றிக் கொண்டு நேற்று பள்ளிக்கூட பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் பள்ளி குழந்தைகள் 61 பேரும், சில ஆசிரியர்களும் பயணம் செய்தனர்.
அவ்கு நகரில் உள்ள வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வீதியின் மறுபுறம் வந்த லொரி பள்ளி பஸ் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பயணம் செய்த பஸ் நிலைகுலைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனாலும், இந்த கோர விபத்தில் பள்ளிக் குழந்தைகள் உட்பட மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
அதிவேகமாக வந்த லொரியின் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசமான வீதிகள், அதிவேக பயணம் காரணமாக நைஜீரியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment