ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 1, 2020

ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய மாகாண ஆளுநர்

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்
ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்த மத்திய மாகாணத்திலுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், மத்திய மாகாண ஆளுநருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று கண்டியிலுள்ள ஆளுநரின் வதிவிடத்தில் நேற்று (01) நடைபெற்றது.

இதன்போது மலையக ஆசிரியர் உதவியாளர்கள் விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ள போதிலும் மத்திய மாகாணத்திலுள்ள சுமார் 420 ஆசிரியர் உதவியாளர்கள் இன்னும் உரிய வகையில் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய இ.தொ.கா. பிரதிநிதிகள், அவர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்ற ஆளுநர், விரைவில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளரும், ஊவா மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன், மத்திய மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் துரை மதியுகராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கணபதி கணகராஜ் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment