எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா? : சி.வி.விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா? : சி.வி.விக்னேஸ்வரன்

முன்னாள் போராளிகள் சுமந்திரனை படுகொலை செய்ய முயன்றாத பொலிஸார் நீதிமன்றில்  கூறவில்லை ; சி.வி.விக்னேஸ்வரன் | Virakesari.lk
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களென்றால் அவற்றைப் பாதுகாக்கும் கோரிக்கை தமிழ் மக்களிடம் இருந்து வர வேண்டுமே ஒழிய சிங்களவரை மட்டும் உள்ளடக்கிய செயலணியில் இருந்துவரக்கூடாது என்றும் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், எமது கட்சியாகிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அரசியலில் தன்னாட்சி பொருளாதாரத்தில் தன்நிறைவு தனி மனித மற்றும் சமூக ரீதியில் தற்சார்பு என்ற குறிக்கோள்களை கொண்டுள்ளது. கோவிட் - 19 நோய் பரவல் எமது உணவு சம்பந்தமாக நாம் தன்னிறைவு அடைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. தன்னிறைவு மட்டுமல்ல அதற்கு அப்பால் சென்று ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்கு நெல் விவசாயம் அமைய வேண்டும் என்பதே எமது கருத்து. 

அத்துடன் எமது உற்பத்திக்கு பெறுமதி சேர்த்து எவ்வாறு ஏற்றுமதி செய்யலாம் என்பது பற்றியும் ஆராய வேண்டும். இதற்காக அரசாங்கம் விவசாயிகளுக்குப் போதிய அனுசரணைகளை வழங்கி நெல் உற்பத்தியை வலுவடையச் செய்ய வேண்டும். பெறுமதி சேர்ப்பது பற்றி அறிவுரை வழங்க வேண்டும். ஏற்றுமதி செய்யவும் அரசாங்கம் உதவி புரிய வேண்டும். தன்னிறைவு நோக்கி நகர்வதாவது போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பல நன்மைகளைக் கொண்டுவரும். பலவிதமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கும் ஒரு நாடு தன்னிறைவை நோக்கி நடப்பதே நன்மை பயக்கும். 

அத்துடன் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பது எமது மக்களிடையே தொழில்களை ஊக்குவிக்க உதவும். போரினால் பாதிக்கப்பட்ட எமது இடங்களில் வேலையில்லாதவர்களின் தொகை 10 சதவிகிதங்களுக்கு அதிகமாக உள்ளது. நாட்டின் விகிதம் சராசரி 6 சதவீதத்திற்குக் குறைவாகவே இருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வேலையில்லாத நிலைமையினைக் குறைக்க உடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

வடக்கு கிழக்கில் விவசாயமே முக்கிய பொருளாதார நடவடிக்கையாகும். சுமார் 40 சதவிகிதத்தினர் விவசாயத்துடன் தொடர்புடையவர்களே. ஆனால் அண்மைக் காலங்களில் தமது பூர்வீகக் காணிகளில் கூட விவசாய நடவடிக்கைகளில் எம் மக்கள் ஈடுபடுவது தடுக்கப்பட்டு வருகின்றது. 

அண்மையில் கிழக்கு மாகாணத் தொல்பொருள் செயலணியைச் சேர்ந்த பிக்கு ஒருவர் 1000 ஏக்கர் காணிகளில் இதுவரை காலமும் பயிர் செய்து வந்த விவசாயிகளை குறித்த காணிக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று பயமுறுத்தியமை நினைவிருக்கும். தொல்பொருள் ஆராய்ச்சிக்குத் தேவையான காணி என்று கூறி விவசாயிகள் தமது சொந்தக் காணிகளுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளார்கள். இம்முறை பயிர் செய்ய முடியாது போகும் என்று அவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

மாகாண சபைக்கு காணி அதிகாரங்கள் கொடுக்கக் கூடாது என்று எம்மவர் சிலர் கூறி வருகின்றார்கள். இந்த விடயத்தை அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும். எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா? எமது நாட்டின் சகல இனங்களையும் ஒன்று கூட்டி பொருளாதார புனரமைப்புக்கு வித்திடுவது தொல்பொருள் காரணத்தைக் காட்டி ஒரு இனத்தை தாழ்த்தி வைத்து அவர்களை எழும்பவிடாமல் செய்வது உகந்ததா? 

இந்த தொல்பொருள் ஆராய்வு விடங்கள் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடமா சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடமா என்று கூட இதுவரையில் ஊர்ஜிதப்படுத்தவில்லை. இவை தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களென்றால் அவற்றைப் பாதுகாக்கும் கோரிக்கை தமிழ் மக்களிடம் இருந்து வரவேண்டுமேயொழிய சிங்களவரை மட்டும் உள்ளடக்கிய செயலணியில் இருந்து வரக்கூடாது. 

ஆகவேதான் சிங்கள தமிழ் முஸ்லீம் மற்றும் வேறு நாட்டு தென்னாசிய வரலாற்று வல்லுநர்களைச் சேர்த்து ஆணைக்குழுவொன்றை கூட்டி சிங்கள மொழி பேசுவோர் பற்றிய முழுவிபரங்களைச் சேகரிக்கச் சொல்லிக் கேட்டுள்ளோம். பௌத்தர்கள் என்றவுடன் அவர்கள் சிங்களவர்களே என்று எண்ணுவது மடமை. 

தமது காணிகளில் பயிர் செய்யாது தடுக்கப்பட்ட திருகோணமலை குச்சவெளி மக்களுக்கு திரும்பவும் தமது காணிகளுக்குள் இறங்கி விவசாயம் செய்ய ஆவன செய்யப்பட வேண்டும். பிரதம மந்திரி இது பற்றிய நடவடிக்கைகளை தயவு செய்து உடனே எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக எதனையும் நான் ஆவணங்களில் காணவில்லை. ஆனால் அவர்களின் நலவுரித்துகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை மேம்படுத்தத் தேவையான நிதியத்தை முன்னர் எமக்கு உதவி புரிய முன்வந்த ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்து பெற ஆவன செய்ய வேண்டும் இவ்வாறு நிதியங்களைப் பெறுவது பாதிக்கப்பட்டோருக்கும் நன்மை பயக்கும். நாட்டுக்கும் அந்நிய செலாவணியை தருவித்து நிற்கும். 

நாம் தற்போது வடக்கு கிழக்கில் இரு விதமான சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். ஒன்று நிர்வாகம் ரீதியானது. மற்றையது யதார்த்த பூர்வமானது. நிர்வாகமானது இதுவரையில் மேலிருந்து கீழ் நோக்கி ஆணையிடுவது போன்றே நடந்தேறி வந்துள்ளது. எமக்கு எவை எவை நன்மை பயப்பன என்பதைக் கொழும்பே தீர்மானித்து வந்துள்ளது. பொருளாதார திட்டங்கள் யாவும் கொழும்பில் இருந்தே தயாரித்து வரப்படுகின்றன. அதன் பின் அவை எம்மேல் பலாத்காரமாகப் திணிக்கப்பட்டு வருகின்றன. 

எமது அடையாளங்கள் எமது நிலம் எமது பாரம்பரியம், காலநிலை எமது கலாச்சாரம் எமது வாழ்க்கை முறை போன்றவை இதுவரை காலமும் கணக்கில் எடுக்கப்பட்டு வந்ததாகத் தெரியவில்லை. திட்டங்கள் தீட்டும் போது எமது அலுவலர்கள் நிபுணர்கள் உடன் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. 

எமது மாகாணத்திற்கு எவை நன்மை பயக்கும் என்று நாமே சிந்தித்து செயலாற்ற நாம் அனுமதிக்கப்படவில்லை. அதற்கான அதிகாரமும் பலமும் எமக்குத் தரப்படவில்லை. இதை நான் வடக்கின் முதலமைச்சராக இருந்த காலத்தில் உணர்ந்து கொண்டேன். 

அடுத்து யதார்த்தபூர்வமான சவால்கள். எமது மின்சார மீற்றர்களை வாசித்து வரும் சிற்றூழியர்கள் தற்போது தெற்கில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் உள்ளூரில் வேலையின்மை அதிகமாகி வருகின்றது. அடுத்து படையினர் தம் வசம் வைத்திருக்கும் காணிகள். எமது மக்களின் வழமையான வாழ்க்கை முறை இவர்களின் பிரசன்னத்தால் மாற்றமடைந்து வருகின்றது. 

பொருளாதாரத் துறையில் தன்னிறைவு தற்சார்பு சம்பந்தமாக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். அதேநேரம் ஒரே நாட்டினுள் எமது வடகிழக்கு மக்கள் தமது நடவடிக்கைகளை பிறரின் உள்நுழைவின்றி தாமே கொண்டு நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment