(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கம் வரி அறவிடும்போது வசதி உள்ளவர்களிடம் அறவிட வேண்டுமே தவிர ஏழை மக்களிடம் அதனை திணிக்கக்கூடாது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மீது இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
வரி சுமை ஏழை மக்களிடமிருந்தும் அறவிடுவதால் அந்த மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் வரி அறவீட்டில் வசதி குறைந்த மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அந்த துறையில் தொழில் செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா தொற்று பரவலே இதற்கு காரணமாகும்.
அதேபோன்று எமது மக்களில் அதிகமானவர்கள் விவசாயத் துறையில் ஈடுபடுபவர்கள். அவர்களுக்கு தேவையான உரம் கிடைப்பதில்லை. அதனால் விவசாயத்தை முறையாக மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வருமானம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் விவசாயம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment