திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை நீடித்தது யாழ். நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை நீடித்தது யாழ். நீதிமன்றம்

தியாகி திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தியாகி திலீபன் நினைகூரலை தடைசெய்யக் கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே, இந்த உத்தரவை பிறப்பித்தது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரிய மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திகுமார், கஜேந்திரன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்த்திபன், முன்னாள் மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க. சுகாஷ், அரசியல் செயற்பாட்டாளர் க.விஸ்னுகாந்த், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன், தமிழ் அரசுக் கட்சியின் பிருந்தாபன் உள்ளிட்ட 20 பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஏற்படும் என்று பொலிஸாரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை (செப்.14) அழைக்கப்பட்டது. பொலிஸாரின் விண்ணப்பம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.

அத்தோடு, வழக்கு செப்ரெம்பர் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த வழக்கில் பிரதிவாதிகள் 20 பேரையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை வழங்கியிருந்தது. 

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த 21ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட் சார்பில் சட்டத்தரணி கணதீபன் முன்னிலையாகினார்.

அத்துடன், மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் ஆகியோர் இலங்கை குற்றவியல் நடைபடி சட்டக்கோவையின் 106 பிரிவின் 4ஆம் உப பிரிவின் கீழ் இந்த வழக்கை பொலிஸார் தாக்கல் செய்தமை தவறு என்று சட்ட ஏற்பாடுகள், முற்தீர்ப்புகளை வைத்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர். அதனால் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அவர்கள் மன்றுரைத்தனர்.

தியாக தீபம் திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் என நிரூபிக்க அவரது வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து யாழ்ப்பாணம் தலைமகயகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமர்ப்பணம் செய்திருந்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று யாழ்ப்பாணம் மாநகர் முதல்வர் உள்ளிட்ட இருவரது சமர்ப்பணங்களை முன்வைக்கும் வாய்ப்பை தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், கட்டளை இன்று (செப்.24) வியாழக்கிழமை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment