(இராஜதுரை ஹஷான்)
மக்கள் மத்தியில் நெடுகாலமாக காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட அடிப்படையில் காணி விவகார நீதிமன்றத்தை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும். இதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுமக்கள் மத்தியில் காணப்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காணி, பிரதான காரணியாக உள்ளது. காணி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கும் பிணக்குகள் இறுதியில் கொலை மற்றும் பாரதூரமான குற்றச் செயல்களுக்கு கொண்டு செல்லும்.
காணி தொடர்பான பிரச்சினைகளுக்கான வழக்கு விசாரணைகள் 25 தொடக்கம் 30 வருட காலம் வரை நீண்டு செல்லும் ஒரு கட்டத்தில் வழக்கு தாக்கல் செய்தவர் நியாயம் கிடைக்காமலே உயிரிழந்து விடுவார்.
ஆகவே காணி பிரச்சினைகள் தொடர்பில் விசாரணைகளை 3 மாத காலத்துக்குள் நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட மட்டத்தில் காணி விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை ஸ்தாபிக்க காணி விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
அரச காணிகளில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ள பொதுமக்களை பிறிதொரு இடத்தில் குடியமர்த்தி உறுதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
காணி விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாக முரண்பாடற்ற தீர்வுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி தொடர்புடைய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment