ஐ.நா தொடர்பான அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான அறிவிப்புக்கள் ஒரு 'செய்தியாக' ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது : எஸ்.சிறிதரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 19, 2020

ஐ.நா தொடர்பான அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான அறிவிப்புக்கள் ஒரு 'செய்தியாக' ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது : எஸ்.சிறிதரன்

(நா.தனுஜா) 

ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்தும் விலகுவது பற்றி இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதே தவிர, இலங்கையை விலக்கி விட்டோம் என்று ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அதன் அங்கத்துவ நாடுகளோ கூறவில்லை. எனவே பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கல் பொறிமுறையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலக முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். 

ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருக்கிறார். இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய கட்டமைப்புக்களின் சுதந்திரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் அந்த அறிக்கையின் ஊடாக எச்சரித்திருக்கிறார். 

அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டதிலிருந்து, மனித உரிமைகள் குறித்து கொண்டிருக்கக் கூடிய பொறுப்புக்களை தொடர்ச்சியாக மறுதலித்து வருவது கவலையடையச் செய்வதாகவும் தெரிவித்திருந்தார். 

அது மாத்திரமன்றி சிவில் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு போர்க் குற்றச்சாட்டுக்களுக்குள்ளான முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் விசனம் வெளியிட்டிருந்தார். 

எனினும் இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்ற அனைத்தையும் கவனத்திலெடுக்க வேண்டும் அல்லது அவற்றுக்கமைவாக செயற்பட வேண்டும் என்ற அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று குறிப்பிட்டார். 

அவ்வாறெனின் ஐ.நா.விலிருந்து விலகலாம் அல்லவா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது நல்ல யோசனை என்றும் அதன் முதற்கட்டமாகவே 30/1 தீர்மானத்திலிருந்து விலகும் தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். 

இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று வினவிய போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மேற்கண்டவாறு பதிலளித்தார். 

அவர் மேலும் கூறியதாவது ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்தும் விலகுவது பற்றி இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதே தவிர, இலங்கையை விலக்கி விட்டோம் என்று ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அதன் அங்கத்துவ நாடுகளோ கூறவில்லை. 

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றன என்பதற்குக் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதனை 2015 ஆம் ஆண்டில் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர ஏற்றுக் கொண்டார். ஆக சர்வதேச கட்டமைப்பொன்றில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானமொன்றை ஒரு அரசாங்கம் ஏற்றுக் கொள்வதும், பிறிதொரு அரசாங்கம் ஏற்க முடியாது என்று கூறுவதும் நாட்டின் மீதான நன்மதிப்பிற்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். 

அதுமாத்திரமன்றி தன்னிச்சையாக வெளியிடப்படுகின்ற இத்தகைய ஒருதலைப்பட்சமான அறிவிப்புக்கள் ஒரு செய்தியாக ஏற்றுக் கொள்ளப்படவும் முடியாதவையாகும். அதுமாத்திரமன்றி சிவில் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிப்பதன் ஊடாக நாட்டில் 'நவீன இராணுவ ஆட்சி' ஒன்றை உருவாக்குவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்கு எமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் வெளியிட்டிருக்கும் கருத்தை வாஞ்சையுடன் வரவேற்கின்றோம். 

ஐ.நா அங்கத்துவ நாடுகளை சாட்சியாக வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து எந்தவொரு அரசாங்கமும் தாம் நினைப்பதுபோன்று வெளியேற முடியாது. பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கல் பொறிமுறையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகமுடியாது. காலமே அதற்கான பதிலைச் சொல்லும் என்றார்.

No comments:

Post a Comment