
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பிரதான நகரில் அமைந்துள்ள தொடர்பாடல் நிலையமொன்றினை உடைத்து பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (01.09.2020) அதிகாலை 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, ஒரு லட்சத்து பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பணம் மற்றும் மீள் நிரப்பு அட்டைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
குறித்த நபர், தொடர்பாடல் நிலையத்தை இரும்பு கம்பியால் உடைத்து, பணம் மற்றும் மீள் நிரப்பும் அட்டைகள் எடுத்துச் செல்லும் காட்சிகள் அக்கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
அண்மைக் காலமாக கொட்டகலை பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதனாலும் இது குறித்து எவரும் இதுவரை கைது செய்யப்படாமையினால் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment