ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் தென் கொரியா நோக்கி நகர்கிறது - 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து - News View

About Us

About Us

Breaking

Monday, September 7, 2020

ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் தென் கொரியா நோக்கி நகர்கிறது - 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

ஜப்பானை தாக்கிய ஹைசென் புயல் தென் கொரியா நோக்கி நகர்கிறது- 300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
ஜப்பானின் தெற்கு பகுதியை ஹைசென் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியதைத் தொடர்ந்து, சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள தீவுகளை, கடந்த வாரம் ‘மேசக்‘ என்ற சக்தி வாய்ந்த புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஜப்பான் இன்னும் மீண்டு வராத நிலையில் அங்கு ஹைசென் என்கிற சக்தி வாய்ந்த புயல் உருவானது. இந்த புயல் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. 

இந்தப் புயல் கரையை ஜப்பான் கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் புயலின் போது ஒகினாவா, ககோஷிமா, நாகசாகி மற்றும் குமாமோடோ ஆகிய மாகாணங்களின் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் மிகவும் சீற்றமாக காணப்படும் என்றும், தாழ்வான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. பாடசாலைகள், சமூக கூடங்கள் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்லும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆனால் நெரிசலான பொது முகாம்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க பெரும்பாலான மக்கள் புயல் அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் தங்க முடிவு எடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே ஹைசென் புயல் ஜப்பானின் தென்மேற்கு மாகாணங்களில் தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் பாடசாலை, கல்லூரிகளை மூடுவதற்கு வழிவகுத்துள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அமாமி ஓஷிமா தீவில் சரக்கு கப்பல் கவிழ்ந்ததில் மாயமான மாலுமிகளை தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜப்பான் கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த புயல் ஏற்கனவே கணித்தபடி ஜப்பானில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

ஹைசென் புயல் தென் கொரியாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அந்தப் புயல் இன்று (திங்கட்கிழமை) தென் கொரியாவை தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த புயல் தென் கொரியாவின் இரண்டாவது பெரிய நகரமான புசான் நோக்கி செல்வதாக அந்நாட்டின் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. 10 விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

புயல் நகர்ந்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் ஜேஜு தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக 5000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜேஜு தீவு மற்றும் கியான்சாங் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் தென் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment