20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாட்டுக்கு பொருத்தமானதா என்பதை ஆராய வேண்டும் - இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாட்டுக்கு பொருத்தமானதா என்பதை ஆராய வேண்டும் - இராதாகிருஷ்ணன்

"அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் பல குறைபாடுகள் உள்ளன. சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே ´20´ தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் வெளிவந்த பின்னர் எமது முடிவை அறிவிப்போம்" என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு ஹர்த்தால், 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் ஆகியன தொடர்பில் அவர் கூறியதாவது, "வடக்கு, கிழக்கில் ஜனநாயக ரீதியில் நடைபெறும் பூரண ஹர்த்தாலுக்கு நாமும் ஆதரவு தெரிவிக்கின்றோம். ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் எதிர்ப்பை வெளியிடமாட்டோம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான காணொளி மூல கலந்துரையாடல் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பாரத பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டமாக முன்வைக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். எனவே, இதனை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மோடியின் அறிவிப்பை நாமும் வரவேற்கின்றோம்.

13 விடயத்தில் மோடி அறிவுறுத்தல் வழங்கலாம், ஆனால் அழுத்தம் கொடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் 13 பற்றி பேசப்பட்டுள்ளது. எனவே, சில அமைச்சர்கள் இல்லை என கூறுவதை ஏற்க முடியாது.

அதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாம் இன்னும் எமது முழுமையான அறிவித்தலை வழங்கவில்லை. எது எப்படியிருந்தாலும் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாட்டுக்கு பொருத்தமானதா என்பதை ஆராய வேண்டும். 19 ஊடாக நாட்டில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டது.

அதனை நாம் ஆதரித்திருந்தோம். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இருந்த மோதலால் சிக்கல்கள் உருவானதே தவிர 19 ஆவது திருத்தச் சட்டத்தை குறைகூற முடியாது.

கணக்காய்வு ஆணைக்குழு ஒழிப்பு, பாராளுமன்றத்தை ஓராண்டுக்கு பின் கலைத்தல் உட்பட 20 இல் ஏற்றுக் கொள்ள முடியாத சில விடயங்கள் உள்ளன. ´20´ இற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும் தாக்கல் செய்துள்ளதால் நாம் தனியாக மனுதாக்கல் செய்யவில்லை.

எனவே, உயர் நீதிமன்றத்தின் சட்ட விளக்கம் வெளிவந்த பின்னர், 20 இல் எவ்வாறான திருத்தங்கள் இடம்பெறவுள்ளன என்பது உட்பட சில விடயங்களை கருத்திற் கொண்டு எமது முடிவு அறிவிக்கப்படும்" எனவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment