(க.பிரசன்னா)
தேர்தல் வாக்குறுதிகள் பல தேங்கிக் கிடப்பதுடன் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையில் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதிலும் 13 ஆம் திருத்தத்தை நீக்குவதிலுமே அரசாங்கம் கவனம் செலுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர், மேலும் தெரிவிக்கையில், நாட்டின் கொரோனா நிலைமையின் கராணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளவுயர்வு வழங்கப்படவில்லை, வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அத்துடன் தேர்தல் வாக்குறுதிகள் பல தேங்கிக் கிடக்கின்ற நிலையில் அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதிலும் 13 ஆம் திருத்தத்தை நீக்குவதிலும் கவனம் செலுத்துகின்றது. அது அவசியமான தேவையல்ல. நாட்டு மக்களை புறந்தள்ளிவிட்டு ஒரு குடும்பத்தை மாத்திரம் சக்திப்படுத்துவதற்கான வேலைத்திட்டமே மேற்கொள்ளப்படுகின்றது.
பொருளாதாரத்தை வளர்ச்சியை முன் நோக்கி கொண்டு செல்ல வேண்டும், கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த கல்வியை கட்டியெழுப்ப வேண்டும், மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க வேண்டும் இதற்காகவே மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் மக்களுடைய நிதி விரயம் செய்யப்படுகின்றது. உணவு, பாதுகாப்பு மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு பல கோடி ரூபா செலவு செய்யப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரம் பின்னடைவு கண்டுள்ள நிலையிலும் இவ்வாறு செலவு மேற்கொள்ளப்பட்டும் மக்களுடைய பிரச்சினைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதில்லை.
20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதிலும் 13 ஆம் திருத்தத்தை நீக்குவதிலுமே அரசாங்கத்தின் கவனம் இருக்கின்றது. 19 ஐ கொண்டு வந்தவர்களும் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள். அவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பில் அவதானித்து வருகின்றோம்.
மரண தண்டனை கைதியொருவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது எதிர்காலத்துக்கு தவறான முன்னுதாரணத்தை கொடுக்கும். கைதிகள் எல்லாம் பாராளுமன்றத்துக்கு செல்லலாம் என்ற நிலையை தோற்றுவிக்கும்.
20 ஆவது திருத்தத்தை எதிர்க்கட்சியாக நாங்கள் எதிர்க்கின்றோம். அதேவேளை 13 ஐ மாற்றுவதும் சிறுபான்மையினருக்கு பெரும் ஆபத்தாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின் வீதிக்கு இறங்கி போராடுவோம் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment