(ருத்ரா)
பாசிக்குடா கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயதுடைய சிறுவன் கடலில் மூழ்கி மூச்சுத் தினறி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தன்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (11) பாசிக்குடா யானைக் கல் கடல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
வாழைச்சேனை செம்மன்னோடையைச் சேர்ந்த யாவாத் முகம்மட் றிஸ்வி என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் நேற்று அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா யானைக் கல் கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும் நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஜனாஸா வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டது.
சம்பவ இடத்திற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் சென்று நிலமைகளை கண்டறிந்து கொண்டார்.
குறித்த கடல் பிரதேசமானது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பாதுகாப்பற்ற பிரதேசமாகும் என அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையிலும் இப்பகுதியில் உள்ளுர் சுற்றுலா பயணிகள் சென்று தங்களது பொழுது போக்கு நடவடிக்கைக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் இக்கடல் பகுதியில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கல்குடா பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment