அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக மாயை ஒன்றை அரசாங்கம் காட்டிக் கொண்டிருக்கின்றது. முட்டுக் கொடுக்கும் நான்கு பேர் அடங்கலாக 148 பேரே அரசாங்கத்துடன் இருக்கின்றனர் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுமுன்தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சபாநாயகருக்கு என்று மக்களிடையே கௌரவமொன்று இருக்கின்றது. ஆனால் நீங்கள் தற்போது அழுத்தத்துடனேயே இருக்கின்றீர்கள் என்பது எங்களுக்கு தெரிகின்றது. அழுத்தங்களுக்கு அடிபணியாது, சுயாதீனமான சபாநாயகராக பணிகளை செய்யுமாறு நாங்கள் கேட்கின்றோம். நீங்கள் ஆளும் தரப்பிற்கு மத்திரமல்ல முழு பாராளுமன்றத்திற்கும் சபாநாயகராகவே இருக்கின்றீர்கள்.
அத்துடன் இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை. மூன்றில் இரண்டு இருப்பதை போன்று மாயை காட்டுகின்றனர். அரசாங்கத்திற்கு 58.9 வீதமே வாக்குகள் கிடைத்துள்ளன. எங்கேயும் மூன்றில் இரண்டு கிடைக்கவில்லை. முட்டுக்கொடுக்கும் 4 பேர் அடங்கலாக அரசாங்கத்திற்கு 149 ஆசனங்களே உள்ளன.
சபாநாயகருக்கு வாக்களிக்க முடியாது. இதன்படி 148 ஆசனங்களே அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இதனால் 225 எம்.பிக்களுக்குமான சபாநாயகராக நீங்கள் பணியாற்ற வேண்டும். மாறாக ஆளுங்கட்சிக்கு மாத்திரம் ஆதரவாக உங்களால் செயற்பட முடியாது என்றார்.
No comments:
Post a Comment