ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்கு நாட்டு மக்களுக்கு பொன்னான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது : சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, August 2, 2020

ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்கு நாட்டு மக்களுக்கு பொன்னான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது : சம்பிக்க ரணவக்க

விமானத்தை அனுப்பி நாயை எடுத்து ...
(செ.தேன்மொழி)

நாட்டின் ஜனநாயக கொள்கைக்கும், பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்கு நாட்டு மக்களுக்கு பொன்னான வாய்ப்பு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்த சிக்கலில் இருந்து நாட்டை காப்பற்றுவதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு பலத்தை பெற்றுக் கொடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ராஜபக்ஷர்கள் மீண்டும் அவர்களது குடும்ப ஆதிக்கத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளனர். இது நாட்டுக்குள் மாத்திரமல்ல பொதுஜன பெரமுன என்ற கூட்டணிக்குள்ளும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தின் ஒரு முன்னெச்சரிக்கை. மக்கள் ஜனநாயகத்திற்கு இடத்தை பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

சுதந்திரத்திற்கு பின்னர் பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தை பல போராட்டங்களின் மத்தியில் வென்றெடுத்துள்ளோம். அதற்கமைய ஜனநாயக கொள்கைக்குள் என்றுமே இராணுவ ஆட்சி உள்ளடக்கப்படவில்லை. பல பிரிவினை மோதல்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இந்த நாடு ஜனநாயகக் கொள்கைளை காப்பற்றி வந்துள்ளது. தற்போது அதற்கும் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. 

இதேவேளை பொருளாதாரம் தொடர்பில் அவதானிக்கையில், சுதந்திரத்தின் பின்னர் 1959 களில் தனிநபர் வருமானம் 140 டொலர்களா இருந்தது. கடந்த வருடம் தனிநபர் வருமானம் 3852 டொலர்களாக காணப்பட்டது. 27 மடங்குகளாக அதிகரித்துக் கொண்டுள்ளோம். நாம் இதனை ஜனநாயக முறையிலேயெ வென்றெடுத்துள்ளோம்.

தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. இந்த 70 வருட காலமாக நாம் ஒருமுறையேனும் கடனை செலுத்துவதில் பின்னடைவை கண்டதில்லை.

தற்போதும் தேசிய மற்றும் சர்வவேச அறிக்கையின் படி நாம் பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பிராதன காரணம் கொரோனா வைரஸ் பரவல் கிடையாது. ராஜபக்ஷர்களின் முறையற்ற வரி சலுகையாகும். இதில் கொரோனா வைரஸ் பரவலும் சிறியளவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக அடிப்படையில் பல வெற்றிகளை பெற்றிருந்த போதும். சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் மோஷமான சமூகமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. தேசிய கலாச்சாரம் மற்றும் நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் ஒரு ஆட்சிமுறையை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் சுற்றாடல் தொடர்பில் அக்கறை கொண்டவர்கள் என தங்களை காண்பித்துக் கொண்டாலும் மறைமுகமாக சுற்றுப்புறச் சூழலுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

இதேவேளை அரசியல் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் தற்போது தலைத்தூக்க ஆரம்பித்துள்ளன. இந்த பாதள குழுக்கள் எதற்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் இடமளிக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு இணக்கம் தெரிவிக்காத பாதக்குழுக்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, தங்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் பாதாள குழுக்களுக்கு இடம்கொடுத்து வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் குறைபாடுகள் காணப்பட்டாலும், எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது. மின் கட்டணங்கள் குறைக்கப்பட்டன. அரச ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரித்தோம். ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்தோம். சுகாதார துறையை முன்னேற்றுவதுடன், ஒளடதங்களின் விலையை குறைத்தோம். கல்வித்துறைக்கு பெரும் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். பொதுபோக்குவரத்தையும் பெருமளவில் அபிவிருத்திச் செய்தோம். 

இந்த செயற்பாடுகள் அனைத்தையும் தற்போதைய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சர்வதேச கடனின் வட்டியை கூட செலுத்த முடியாத அரசாங்கமாக ராஜபக்ஷர்களின் அரசாங்கம் மாறியுள்ளது என அவர் இதன்போது தெரித்தார்.

No comments:

Post a Comment