(செ.தேன்மொழி)
ரணில் - மைத்திரி ஆட்சியில் கவலையடைந்திருந்த மக்கள் கோத்தபாய ராஜபக்ஷவினால் தொகுத்து கூறப்பட்ட அழகிய கதைகளுக்கு மயக்கமுற்று அவரை வெற்றி பெறச் செய்தனர். ஆனால் , 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பழைய ஆட்சியையே இவர்கள் முன்னெடுப்பார்கள் என்பதை மக்கள் எதிர்பார்திருக்கவில்லை என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மவட்ட வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எதிர்வரும் தேர்தலில் நன்கு சிந்தித்து வாக்களிக்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கம்பஹாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா பரவலின் போது உரிய நேரத்தில் தேவையான தீர்மானங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. வைரஸ் பரவலை யுத்தத்துடன் ஒப்பிட்டு பேசினார்கள். கொரோனா சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில். மூன்று தினங்களுக்கு மொட்டு கட்சியின் கூட்டத்தை நிறுத்தி வைத்தார்கள். நாட்டு மக்கள் தொடர்பில் சிந்திக்கவில்லை.
இதேவேளை கொள்ளையர்களை சிறைப்பிடிப்பதற்கு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் கொள்ளையிட ஆரம்பித்தனர். மைத்திரியும் - ரணிலும் செய்த காரியங்களில் கவலையுற்றிருந்த மக்கள் கோத்தாபயவின் அழகிய கதைகளுக்கு அடிமையாகி அவரை வெற்றிப் பெறச் செய்தனர்.
ஆனால் ஆட்சிக்கு வந்து 7 மாத காலத்திற்குள் செய்வதாக தெரிவித்த எதனையும் செய்யவில்லை. தற்போது போதைப் பொருளை ஒழிப்பதாக தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதனை குறிப்பிட்டார். போதைப் பொருள் கடத்தல் காரர்களை தூக்கிலிடுவதாகவும் கூறினார். தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷ தகுதியானவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பதாக தெரிவித்து விட்டு, ஆட்சிக்கு வந்தவுடனே என்ன செய்தார் தங்களது உறவினர்களுக்கு நியமனங்களை பெற்றுக் கொடுத்தார்.
உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவன் என்றால் ஒரு மணித்தியாலயத்திற்குள் எரிபொருளின் விலையை குறைக்க முடியும். இவர்களது ஆட்சி மீண்டும் உருவாகுமெனில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதுடன், நாட்டின் வளங்களை கொள்ளையிடுவார்கள்.
இதேவேளை ஊடகங்கள் மீது அடுக்குமுறையை முன்னெடுப்பார்கள். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பழைய ஆட்சியை முன்னெடுப்பார்கள். அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment