அமெரிக்காவின் மருத்துவ சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை சிறந்தது என அமெரிக்க பிரஜை பாராட்டு தெரிவித்து வைத்தியசாலையின் பரிந்துரை குறிப்பேட்டிலும் பதிவு செய்த சம்பவமொன்று அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.
Eliana Apicella எனும் குறித்த அமெரிக்க பிரஜை அண்மையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் விடுதி 6 இல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு குடல்வளரி அழற்சி (Appendicitis) இருப்பது கண்டறியப்பட்டு குடல் வளரியை அகற்றும் அறுவை சிகிச்சை (Appendicectomy) சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் பி.கே. ரவீந்திரன் தலைமையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அவர் கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி பூரண சுகத்துடன் சத்திர சிகிச்சை விடுதியை விட்டு வெளியேறும் போது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மேம்பட்ட சேவையை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் பரிந்துரை குறிப்பேட்டில், அமெரிக்காவில் உள்ள வைத்திய சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை மிகச் சிறந்தது என, அவர் பதிவு செய்துள்ளார்.
அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, "எனது குடல்வளரி சத்திரசிகிச்சைக்காக நான் இந்த வைத்தியசாலையில் இரு இரவுகள் தங்கியிருந்தேன். எனக்கு கிடைத்த அருமையான சேவைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் மிகவும் அன்பாக கவனித்ததோடு, வைத்திய சேவை மிகவும் சிறப்பாக இருந்தது.
அமெரிக்காவில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளுடன் ஒப்பிடும்போது இவ்வைத்தியசாலை மிக சிறப்பானது.
மீண்டுமொரு முறை அனைத்துக்கும் நன்றி
Eliana Apicella
USA
இது வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு மாத்திரமன்றி, அக்கரைப்பற்று மண்ணுக்கும், இலங்கை நாட்டுக்கும் கிடைக்கும் சிறந்ததொரு அங்கீகாரம் என்பது அனைவரது கருத்தாக அமைந்துள்ளது.
(வாச்சிக்குடா விசேட நிருபர் - வி.சுகிர்தகுமார்)
No comments:
Post a Comment