(செ.தேன்மொழி)
எம்.சீ.சீ ஒப்பந்தத்தை தடுக்க வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டதை அடுத்து மக்கள் அதனை வழங்கியுள்ளனர். ஆனால் அரசாங்கம் இன்னமும் அதன் நிலைப்பாட்டை தெரிவிக்காமலே இருக்கின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, எம்.சீ.சீ தொடர்பான அரசாங்கத்தின் நிலைபாட்டை உடனடியாக தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போதும், பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போதும் எம்.சீ.சீ ஒப்பந்தத்தை நீக்குவதற்காக தங்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்குமாறு ஆளும் தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதற்கு இணங்க மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.
ஆனால், தனது கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி இந்த ஒப்பந்தத்தை நீக்குவது தொடர்பில் கருத்து முன்வைப்பார் என்று நாம் எதிர்பார்த்திருந்த போதும், அவர் அது தொடர்பில் எதுவுமே கூறவில்லை.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.சீ.சீ ஒப்பந்தத்தை கைச்சாத்திட போவதாகவும், அவ்வாறு கைச்சாத்திட்டால் உள்நாட்டுக்குள் காணப்படும் முக்கிய இடங்களுக்குச் செல்வதற்கும் அமெரிக்காவிடம் வீசா அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என்று ஆளும் தரப்பினர் பிரசாரம் செய்து வந்தார்கள்.
இதனால் ஒப்பந்தத்தை நீக்குவதற்கு தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்து வந்தார்கள். தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் அவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ள போதிலும் இதுவரையில் அரசாங்கம், எம்.சீ.சீ ஒப்பந்தம் தொடர்பில் அவர்களது நிலைப்பாட்டை அறிவிக்க வில்லை.
No comments:
Post a Comment