நானுஓயா, சமர்செட், தம்பகஸ்தலாவ தோட்டத்தில் நிலச்சரிவினால் பாதிப்புக்குள்ளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் தற்காலிகமாக அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக பல இடங்கள் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நானுஓயா சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தின் லயன் தொடர் குடியிருப்பொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதனால் பாதிப்புக்குள்ளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் கிராம உத்தியோகத்தரின் ஆலோசனைக்கமைவாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நிவாரண உதவிகள் நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
மலையகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையின் காரணமாக மலையக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவு மட்டுமின்றி மரங்கள் முறிந்து விழும் அம்சங்கள் காணப்படுகின்றன.
இதனால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
ரதெல்ல செல்லும் வீதி தாழிறக்கம்
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஊடாக ரதெல்ல வரைச் செல்லும் பிரதான வீதியில் வங்கி ஓயாவிற்கும் கல்கந்தவத்தைக்கும் இடையிலான பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் வீதி பாரிய நில வெடிப்புடன் நிலம் தாழிறங்கியுள்ளது.
கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் இந்நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் தலவாக்கலை நகருக்கு இவ்வீதி வழியாக செல்லும் வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.
மேலும் இவ்வீதி வழியாக தலவாக்கலை நகர பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், இதர தொழில்துறைகளுக்கு செல்லுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(தலவாக்கலை குறூப் நிருபர் - பி. கேதீஸ்)
No comments:
Post a Comment