வெளிநாடுகளிலிருந்து அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளுக்கு என்ன நடந்தது - ஐக்கிய தேசியக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

வெளிநாடுகளிலிருந்து அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளுக்கு என்ன நடந்தது - ஐக்கிய தேசியக் கட்சி

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் வெளிநாடுகளிலிருந்து அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் செயாரா ஹேரத் வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. இதனை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கத்திடம் எந்த வித வேலைத்திட்டங்களும் இல்லை.

அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் எமக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள போதிலும் பாராளுமன்றம் மூடப்பட்டுள்ள காரணத்தினால் அரசாங்கத்திடம் வினவுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளது. இவர்கள் ஆரம்பத்திலிருந்தே சர்வாதிகார போக்கிலேயே செயற்பட்டு வருகின்றார்கள்.

வைரஸ் பரவல் காரணமாக நாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து பெருந்தொகையான நிவாரண நிதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றுக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் இது வரையிலும் அறிவிக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு முன்னர் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு எந்தவித பதிலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. தற்போது மீண்டும் நாங்கள் அதேகேள்வியை அரசாங்கத்திடம் கேட்கின்றோம். அதற்காவது உரிய முறையில் விளக்கமளியுங்கள்.

தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிவாரணம் தொடர்பில் அரசாங்கம் திருப்பதிகரமாக எந்த வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஒரு மாதத்துக்கு 5000 ரூபாய் நிவாரண நிதியை விட அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் வேறெந்த திட்டமும் இல்லை.

தற்பொதைய ஆளும் தரப்பினர் முன்னரும் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இதன்போது இவ்வாறான நெருக்கடி நிலைமைகளின் போது வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற பணத்தை அவர்கள் எவ்வாறு மோசடி செய்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எமக்கு சந்தேக ம் எழுந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment