தமிழ் மக்களின் தேசியத் தலைவரென தம்மைக் கூறிக் கொள்பவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் கொலை செய்யப்படும்போது எங்கே போனார்களென ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் அன்று தமது பதவியை இராஜினாமா செய்திருந்தால் அரசாங்கத்திற்கு ஒரு பேரிடியாக இருந்திருக்கும். மக்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.
நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன், இவர்களெல்லாம் தமிழ் மக்களின் நலனிற்காக தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் ஏன் இவ்வாறு கட்சிகளாக பிரிந்து வாக்குகளை சிதறடிப்பதற்கு செயற்படுகின்றார்கள்.
அத்தோடு சிலர் தம்மை தேசியத் தலைவர் என்று கூறித் திரிகிறார்கள். இவர்களெல்லாம் வன்னியில் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற போது எங்கே இருந்தார்கள்.
மேலும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிலர், விடுமுறை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளில் தங்கியிருந்தனர். அவ்வாறு தமது சுயலாப அரசியல் செய்வதற்காகவே இங்கே வாக்கு கேட்டு வருகின்றார்கள். எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்
ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரைக்கும் இரண்டு முறை எமது தலைவர் பிரதமராக இருந்த போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டார். எனவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலே நமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment