மன்னாரிலிருந்து வந்து பிளாஸ்டிக் வாளிகளை வழங்கும் போது கையடித்தவர்களல்லவா நாங்கள் - பாராளுமன்ற உறுப்பினர்களைத் தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளது : அதாஉல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Friday, July 3, 2020

மன்னாரிலிருந்து வந்து பிளாஸ்டிக் வாளிகளை வழங்கும் போது கையடித்தவர்களல்லவா நாங்கள் - பாராளுமன்ற உறுப்பினர்களைத் தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளது : அதாஉல்லாஹ்

பாறுக் ஷிஹான்

முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் ரவூப் ஹக்கீம் தொலைபேசி சின்னத்தில் பால் போத்தல் சஜித் பிரேமதாவையும் கூட்டிக்கொண்டு வருவதைக் கூறுவதனால் என்னை பைத்தியம் என்பார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களைத் தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட கல்முனைப் பிரதேச பாராளுமன்றத்தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுத்தெரிவு வேட்பாளர் றிஸாட் ஷெரீப் மற்றும் கல்முனை தேசிய காங்கிரஸ் மத்திய குழுவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை (2) இரவு தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற போது, தனதுரையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில், எமது சமூகத்தின் பிரச்சினைகள் எதிர்காலத்தில் சேதாரமில்லாமல் தீர்க்கப்பட வேண்டும். குருடனைப் பார்த்து விழி விஜி என்று சொல்வதில் பயனில்லை. அதே போன்று தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் ஒரு போதும் விழிக்க முடியாது. இப்படி கட்சியின் தலைவர் இருக்கும் நிலையில், தம்பி ஹரீீஸ் கட்சியின் பிரதித்தலைவரை நாம் எவ்வாறு சொல்லிக்கொள்வதென்று தெரியவில்லை. 

அதேபோன்று, காலத்திற்கு காலம் மக்கள் தலைவரே பேசுவார். ஆனால், வேறுவழியில்லை. நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வேண்டுமென்பதற்காக முஸ்லிம் காங்கிரசை அவர்கள் ஆதரிப்பார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களைத் தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளது. இதுவே உண்மையாகும்.

முஸ்லிம் காங்கிரஸால் பிறை கொடியா? புலிக்கொடியா என்ற கோஷத்தினை மாத்திரம் எழுப்ப முடியும். டயர்களை எரிக்க முடியும். மக்களை வீதியில் நிறுத்த முடியும். தலைவன் என்பவன் மக்களை வீதியில் நிறுத்துபவனல்ல. தீர்வைப்பெற்றுக் கொடுப்பவனே ஆவான். நான் பாராளுமன்றம் செல்ல வேண்டுமென்றால், முஸ்லிம் காங்கிரஸில் இருந்திருக்க முடியும்.

1989 பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப் தலைமையில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளிலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப்பெறப் போராடி ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெற்றோம். அதே நிலையில், தலைவரது வழியில் தேசிய காங்கிரஸ் இரண்டாம் கட்டம் என்பதனை ஞாபகப்படுத்துகிறது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களிடம் இருக்கும் வாக்குப்பலத்தைப் பயன்படுத்தினால் நான்கு ஆசனத்தைப் பெறலாம். இதை நான் சொன்னால் பைத்தியம் என்பார்கள். களத்திலே முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் ரவூப் ஹக்கீம் தொலைபேசி சின்னத்தில் வருகின்றார் கூடவே பால் போத்தல் சஜித் பிரேமதாவையும் கூட்டிக்கொண்டு வருகிறார். இதன் முலம் எதைச்சாதிக்கப் போகின்றார்கள்? மீண்டும் முஸ்லிம்கள் அரசியல் தெரியாதவர்கள் எனக்காட்டிக்கொடுக்கப் போகின்றாரா?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதுர்தீன் கிழக்கு மாகாணத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்கின்றார். தனது சொந்த மண்ணிலே 30 வருடங்களாக அகதிகளாக இருக்கும் மக்களின் அபிலாஷைகளை முறையாக எண்ணவில்லை. அவர்களுக்கு வீடு வசதி, வாழ்வாதாரம் மற்றும் நெறிமுறைகளைப் பற்றி சிந்திக்கவில்லை. உட்கட்டமைப்பூடாக ஒரு வீதியைக்கூட அகலமாகப் போடவில்லை. 

ஆனால், கிழக்கு மாகாணத்தைத் தாருங்கள் நான் அபிவிருத்தி செய்யப்போகின்றேன் என ரிஷாத் பதூர்தீன் கேட்டார். கேட்பவன் செய்து காட்டியவனாக இருக்க வேண்டும். இதை நாம் கேட்டு வளைத்திருந்து கையடித்து சந்தோசப்பட்டோம் அல்லவா? பிளாஸ்டிக் வாளிகளை வழங்குவதா அபிவிருத்தி? இன்று தன் குடும்பத்தையையே காப்பாற்ற முடியாத நிலை விசாரணைகளில் தனது சகோதரர்கள் நீதிமன்றமும் என அவரது காலம் செல்கிறது.

வரலாற்றில் நீங்கள் வெளிக்காட்டியிருக்கும் துவேசங்கள் முஸ்லிம் சமூகத்தைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்த வைத்த உங்களால் இன்று சமூகத்தைத் தூக்கிப்பிடிக்க முடியாது. ஹக்கீம் வந்து பிரதேசவாதத்தைத் தூண்ட வைத்தார் அதன் வெளிப்பாடு தான் சாய்ந்தமருது, கல்முனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று எனப்பிரித்தாளும் தந்திரங்கள். தேர்தல் காலத்தில் தீர்த்தக்கரை போன்று பத்தாடி விட்டு அவர்கள் போனார்கள்.

நாங்கள் எப்படியாவது அரசியலுக்குப்போக வேண்டுமென்பதற்காக தம்பி ரிஷாட் பதுர்தீனைக்கூட தலைவராக்கிய கூட்டமே நாம். கல்முனை மண்ணிலே பிளாஸ்டிக் வாளிகளைப் பகிர்கின்ற கலாசாரத்தை கொண்டு வந்தவர்கள் அவர்களைச்சாரும். மன்னாரிலிருந்து வந்து பிளாஸ்டிக் வாளிகளை வழங்கும் போது கையடித்தவர்களல்லவா நாங்கள்?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 33 வாக்குகளுக்கு பெறுமதியில்லாமல் செய்ய வாக்குப்போட்டோமல்லவா?தேர்தல் வரும் போது தம்பி குடும்பத்தை அரசாங்கமும் பொலிஸாரும் விசாரணை செய்யும் போதும் கூட மக்கள் புரிந்து கொள்ளவில்லையா? எனக்கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment