(எஸ்.அஷ்ரப்கான்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இம்முறை கல்முனைத் தொகுதியை வெற்றி கொண்டு வரலாற்றுச் சாதனை படைக்குமென மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட முதன்மை வேட்பாளரும் கட்சியின் இஸ்தாபகச் செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
தனது கல்முனை அலுவலகத்தில் நேற்று (03) இடம்பெற்ற விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றுகையில், கடந்த தேர்தலில் எவ்வித அதிகாரமுமில்லாது அம்பாரை மாவட்டத்தின் சகல ஊர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வியாபிக்கச்செய்ததன் ஊடாக பெரும் வெற்றியை நாம் கண்டோம். காலடியெடுத்து வைத்த முதல் தடவையிலேயே 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை எமது கட்சி பெற்றது ஒரு சாதனையாகும்.
மறைந்த தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப்பிறகு அம்பாரை மாவட்டத்தில் இழந்த உரிமைகளையும், நடைபெறாத அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஒரு மாற்று அரசியல் சக்தியில்லாமலிருந்த கால கட்டத்தில் தான் நாம் கட்சியை அம்பாரையில் அறிமுகப்படுத்திய போது, பல சவால்களை எதிர்கொண்டு இன்று முழுமையாக மாவட்டத்தின் சகல ஊர்களும் எம்மீது நம்பிக்கை கொண்டு ஜனநாயக அரசியல் மாற்றத்திற்காக எம்மை ஆதரிக்க முன்வந்துள்ள நிலை ஒரு சாதனையாகும்.
இதனால் இம்மாவட்ட மக்களுக்கு, நாம் இம்முறை தேர்தலில் சிறந்தவர்களை பாராளுமன்றம் அனுப்புவதனுாடாக இம்மக்கள இழந்தவற்றை இயலுமானவரை பெற்றுக்கொடுக்க முனைவோம். அதற்காக அனைத்து அம்பாரை மாவட்ட மக்களும் எம்முடைன் கைகோர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பதோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றியின் பங்காளர்களாக அணைவரும் மாற வேண்டுமென்றும் கூறினார்.
No comments:
Post a Comment