(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டெழுவதற்கு தேவையான சுகாதார சக்தியை வழங்குவது தொடர்பில் சிந்திக்காமல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பித்து பிடித்த வரை போன்று பேசி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டமொன்றில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, என்னுடன் போட்டியிடும் எதிர்த்தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ புத்தியுடன் பேசுகின்றாரா என்று தெரியவில்லை, அவர் பித்து பிடித்த வரை போன்றே பேசி வருகின்றார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் பொருத்தமற்ற விடயங்கள் தொடர்பிலே அவர் அவதானம் செலுத்தி வருகின்றார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது எவ்வாறு என்று நாங்கள் சிந்தித்து, இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, வருமானம் இன்றி இருக்கும் குடும்பங்களுக்கு நாங்கள் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்து அது தொடர்பில் மக்களுக்கு அறிவித்து வருகின்ற போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சிந்திக்காது, 2ஆம் புவனேகபாகு மன்னனின் அந்தப்புரம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றார். அவர் எவ்வாறான நிலையில் இருந்துகொண்டு இவ்வாறு பேசி வருகின்றார் என்று எமக்கு புரியவில்லை என்றார்.
No comments:
Post a Comment