ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை வென்றெடுக்கும், கட்சியை விட்டு வெளியேறியவர்களில் சிலர் முகவரி இல்லாமல் தள்ளாடுகின்றனர் - ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 26, 2020

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை வென்றெடுக்கும், கட்சியை விட்டு வெளியேறியவர்களில் சிலர் முகவரி இல்லாமல் தள்ளாடுகின்றனர் - ரவூப் ஹக்கீம்

திருகோணமலையில் மிகப்பெரிய ஏற்றுமதி ...
வாக்காளர்களின் பேராதரவு அதிகரித்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை தொலைபேசி சின்னத்தில் வென்றெடுக்கும் சாத்தியம் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எஸ்.தௌபீக் மற்றும் நவாஸ் மாஸ்டர் ஆகியோரை ஆதரித்து வியாழக்கிழமை (23) கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, திருகோணமலை மாவட்ட அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வித்தியாசமான வரலாற்றை படைக்கவுள்ளது. அதற்கான தடயத்தை நான் சென்ற இடங்களிலெல்லாம் கண்டேன். எங்களுக்கு அதிகரித்து வரும் மக்கள் பேராதரவை பார்க்கும் போது, இந்த மாவட்டத்தில் எங்களது வேட்பாளர்கள் இருவருமே வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்நாட்டு முஸ்லிம்களுடைய வாக்காளர் தொகையில் அதிகூடிய ஆசனங்களை பெற சாத்தியம் காணப்படுகின்ற மாவட்டங்களில் திருகோணமலையும் ஒன்றாகும்.

அம்பாறை மாவட்டத்தில் ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் எமது கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளதால், ஒரு போனஸ் ஆசனத்தை வென்றெடுக்கின்ற முயற்சி பயனளிக்கும். திருகோணமலை மாவட்ட போனஸ் ஆசனத்தை வெல்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பிரம்மாண்டமான அரசியல் கூட்டணியை ஆதரிப்பதன் மூலம் மாத்திரம் தான் வெற்றியை உறுதிப்படுத்த முடியும். இந்த செய்தியை சொல்வதற்காக வெள்ளிக்கிழமையிலிருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் மேடையேற உள்ளனர்.

ஏனென்றால் இந்நாட்டு அரசியலில் முன்னொரு போதும் இல்லாதளவில் பெரியதொரு சவாலுக்கு நாங்கள் முகங்கொடுத்திருக்கின்றோம். இந்த ஆட்சியாளர்கள் மோசமான அலட்சியப் போக்குடன் முஸ்லிம்களை நடத்துகின்ற நிலவரமொன்றை அனுபவித்து வருகின்றோம். முஸ்லிம்களுடைய அரசியலில் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவில்லாமல் தேசிய கட்சியொன்று வென்ற வரலாறு அண்மைக்காலத்தில் நடந்ததில்லை.

நாங்கள் விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இந்த விவகாரத்தில் மிக கவனமாக இருந்திருக்கின்றோம். தலைவருடைய மறைவுக்கு பிறகு மரச்சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போனஸ் ஆசனத்தை வென்றது மாத்திரமல்ல, தொடர்ந்தும் நாங்கள் தேசிய கட்சிகளுடன் இணைந்து அம்மாவட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியில் சாதனை படைத்துள்ளோம்.

இச்சாதனை இம்முறை தவறுமாக இருந்தால் எங்களை பொறுத்தமட்டில் இன்றை ஆட்சியில் இருக்கின்ற ஆட்சியாளர்களின் ஆணவப் போக்கை சவால் விட்டு அதனால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை தடுத்து நிறுத்துகின்ற கட்டுப்படுத்துகின்ற முயற்சியில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அம்பாறை மாவட்டத்தை வெற்றிகொள்வது மாத்திரமல்ல, அதற்கு அடுத்த படியாக ஒப்பிட்டு ரீதியில் ஆகக் கூடிய விகிதாசாரத்தில் மூன்று இனங்களுக்கு மத்தியில் முஸ்லிம் வாக்குகளின் செறிவு கூடிய மாவட்டமான திருகோணமலையையும் வெற்றி கொண்டாக வேண்டும்.

திருகோணமலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எங்களுடன் ஒரே அணியில் சேர்ந்து போட்டியிடுவதனால் போனஸ் ஆசனமொன்றை பெறுவதென்பது இலகுபடுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இந்நிலைமையை அம்பாறை மாவட்டத்திலும் ஏற்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிவில்லை.

சிலர் கட்சியை விட்டு வெறுமனே சன்மானங்களுக்காக வெளியேறியிருந்தாலும், முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியை அசைக்க முடியாது. கட்சியை விட்டு வெளியேறியவர்களில் சிலர் முகவரி இல்லாமல் தள்ளாடுகின்றனர். ஆனால், கட்சியுடைய ஆதரவு தளம் மென்மேலும் உறுதிசெய்யப்பட்டு வருகின்றது. கட்சி நாளுக்கு நாள் பரவலாக்கப்படுகின்றது. ஆதரவாளர்களும், தொண்டர்களும் அயறாது செயற்படுபவர்களாக இருக்கின்றார்கள். கட்சியின் அனைத்து மத்திய குழுக்களும் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கம் ஒருபோதும் பலவீனமடையப் போவதில்லை.

கிண்ணியா பிரதேசத்தில் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதத்தில் பின்னடைவை சந்தித்தோம். இருந்தும் இந்த மாவட்டம் கட்சிக்கு தந்த அரசியல் அடையாளத்திற்காக இழந்து போன ஆசனத்தை தேசியப்பட்டியலினூடாக பெற்றுக்கொடுத்தோம்.

எம்.எஸ்.தௌபீக் கிண்ணியா மண்ணில் மேற்கொண்ட யுகப்புரட்சி சாமானியமானதல்ல. கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபையிலும் அதிக வட்டாரங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் வென்றது. அந்த வெற்றியை பெற்று தந்த பெருமை அவரையே சாரும்.

இன்று எங்களுக்கு வாக்குறுதியளித்தவர்கள் சிலர் எங்களுக்கெதிராக போட்டி போடுகின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் வாக்கு மீறியவர்கள் தொடர்பில் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.

இங்குள்ள தொழில்நுட்பவியல் கல்லூரி எமது வேட்பாளர் தௌபீக்கின் அயராத முயற்சியினால் பெறப்பட்ட ஒன்றாகும். அன்றைய ஆட்சி காலத்தில் இங்கு அமைக்கப்படவிருந்த பல்கலைக்கழக தரத்தினாலிருந்த கல்லூரியை வேறு மாவட்டத்தில் அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. உரிய அமைச்சர்களிடம் என்னை அழைத்துச் சென்று பேசி அதனை இந்த கிண்ணியா மண்ணில் அமைத்துக் கொள்கின்ற முயற்சியில் விடாப் பிடியாக நின்று அவர் வெற்றி கண்டிருக்கின்றார்.

இன்று இங்குள்ள இளைஞர் யுவதிகளின் உயர்தரப் படிப்பிற்கான வழிவகைகளை கொண்ட கல்லூரியாக இது திகழ்கின்றது. அதில் மூக்கை நுழைக்க இன்னோரு அரசியல்வாதி முன்வந்ததும் மக்களுக்கு தெரியும். முன்னர் எந்தவொரு அமைச்சரும் கொண்டுவராதளவில் பலவிதமான அபிவிருத்தி பணிகளை எம்.எஸ்.தௌபீக் செய்துள்ளார். கிண்ணியாவிற்குள் மாத்திரம் 50 கிலோமீட்டர் தூரத்திலான காப்பர்ட் பாதைகளை அமைத்துள்ளார்.

ஏராளமான சவூதி அரேபியா அபிவிருத்தி வங்கியின் நிதியை இம்மண்ணிற்காக கொண்டுவந்து சேர்த்;துள்ளார். கிண்ணியாவின் மிக நீளமான பாலம் அதற்கு சான்றாகவுள்ளது. அவர் இம்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வழிவகைகளை நன்கு அறிந்து வைத்துள்ளார்.

இந்த தேர்தல் முடிந்தவுடன் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வகுக்கின்ற வியூகம் மாகாண ஆட்சியையும் கைப்பற்றுவதாக அமையும்.

நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துரையாடி வருகின்றோம். அவர்களின் இணக்கப்பாட்டுடன் தான் கிழக்கு மாகாண ஆட்சியையும், முதலமைச்சர் பதவியையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அடுத்த கட்டமாக மாகாண சபை தேர்தலிலும் வெற்றி பெறும் முயற்சியில் இருக்கின்றோம். அதற்கான முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் நாங்கள் இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment