இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் (31) முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

முதலாவது விமானப் பயணம் நாளை மறுதினமும் இரண்டாவது விமானப் பயணம் எதிர்வரும் முதலாம் திகதியும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். இதற்கமைய, முதற்கட்டமாக துபாயில் இருந்து இலங்கையர் சிலர் நாளை மறுதினம் நாடு திரும்பவுள்ளனர்.

இவ்விரு பயணங்களிலும் 550 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் நாடு திரும்பும் போது முன்னெடுக்கப்படவுள்ள விதிமுறைகள் தொடர்பில் வினவியமைக்கு, அந்தந்த நாடுகளில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொற்று உறுதி செய்யப்படாதவர்களே நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் நாடு திரும்பிய பின்னர் விமான நிலையத்தில் வைத்து PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment