இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், மழையுடனான வானிலை இன்றும் (25) நாளையும் (26) சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக, மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment