அக்குரஸ்ஸை பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உட்பட ஐவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் உரிய ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி சிவனொளிபாதமலைக்கு சென்ற போதே இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (05) பிற்பகல் 1.00 மணியளவில் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் நல்லத்தண்ணி பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்குரஸ்ஸை பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உடன் மேலும் நால்வருமாக, ஐந்து பேர் அக்குரஸ்ஸை பிரதே சசபைக்கு சொந்தமான கென்டர் ரக வாகனம் ஒன்றில் சிவனொளிபாதமலைக்கு சென்றுள்ளனர்.
மாத்தளை, அக்குகுரணை பொலிஸ் சோதனைகளை தாண்டி அனுமதிப்பத்திரமின்றி பயணித்த மேற்படி ஐவர் பயணித்த வாகனம் நல்லத்தண்ணி பொலிஸ் சோதனைச் சாவடியில் சோதனையிடப்பட்டபோதே, அனுமதிப்பத்திரமின்றி இவர்கள் பயணித்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், அவர்களது வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், மறு அறிவித்தல் வரை அனைத்து விதமான மத யாத்திரைகள், சுற்றுலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம்.கிருஸ்ணா)
No comments:
Post a Comment