எதிர்த்தரப்பினர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமை கவலைக்குரியது - ஆளுந்தரப்பு கூறுகிறது - News View

About Us

About Us

Breaking

Monday, May 4, 2020

எதிர்த்தரப்பினர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமை கவலைக்குரியது - ஆளுந்தரப்பு கூறுகிறது

(எம்.மனோசித்ரா) 

நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் எதிர்தரப்பினர் தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அதனைச் செய்ய மறுத்துள்ளமை கவலையளிப்பதாக ஆளுந்தரப்பு தெரிவித்துள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டதன் பின்னர் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 

இதன் போது தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி.திஸ்நாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் குறிப்பிடுகையில், 

தயாசிறி ஜயசேகர 
பல்வேறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். ரணில் விக்கிரமசிங்க பங்குபற்றியிருக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று எமக்குத் தெரியாது. ஐக்கிய தேசிய கட்சி கலந்து கொள்வதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்த போதிலும் இறுதியில் கலந்து கொள்ளவில்லை. அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று வரவில்லை என நினைக்கின்றேன். 

ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த சந்தர்ப்பத்தில் செய்ய முற்படும் அரசியல் என்ன என்பது பற்றி தெளிவாகத் வெளிப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினராலும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிதியுதவி உள்ளிட்ட வௌ்வேறு விடயங்கள் பற்றி எழுப்பட்ட கேள்விகளுக்கு தெளிவூட்டப்பட்டது. எனவே இந்த கூட்டம் பயனுடையதாக அமைந்தது. 

எஸ்.பி.திஸாநாயக்க 
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது நிலைப்பாடுகளை முன்வைக்க முடியும். எனினும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கான பொறுப்பு சிறிதளவும் இல்லாதவர்கள் எதிரணியினர் என்பது புலப்பட்டுள்ளது. அரசியல் ரீதியில் குறுகிய இலாபத்தைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும். அவ்வாறில்லை என்றால் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் இவற்றை புரிந்து கொள்ளாமை கவலைக்குரியதாகும். 

சுசில் பிரேமஜயந்த 
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்கான பொது வேலைத்திட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. வெற்றிகரமான ஒரு கூட்டமாக இக் கூட்டம் அமைந்தது. அரச அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். இதன் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி தெரியப்படுத்தப்பட்டது. அத்தோடு அவை தொடர்பிலான யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. 

டிலான் பெரேரா 
பாராளுமன்றத்தை தற்போது கூட்ட முடியாது. அவ்வாறு கூட்டினால் அது போலியான பாராளுமன்றமாகும். காரணம் தற்போது சபாநாயகரோ அல்லது பிரதி சபாநாயகரோ இல்லை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு பாராளுமன்றத்தைக் கூட்டுவது ? உண்மையில் கூறுவதானால் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிந்திக்க தெரியவில்லை. இறுதியில் காணப்பட்ட பாராளுமன்றதைக் கூட்டினால் மாத்திரமே அது விளையாட்டு பாராளுமன்றமாகும். 

இது பிரதமரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டமாகும். எனவே தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனும் போது இறுதியாகக் காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி அதற்கு முன்னர் இருந்தவர்களும் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். 

எனவே விளையாட்டு பாராளுமன்றத்தைக் கூட்டுவதைக் காட்டிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடுவது ஆரோக்கியமானதாகும் என்றார். 

No comments:

Post a Comment