யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தனது அதிகாரங்களை பதில் முதல்வரிடம் ஒப்படைத்தார் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தனது அதிகாரங்களை பதில் முதல்வரிடம் ஒப்படைத்தார்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், இரண்டு மாதங்களுக்கு பின்பு இன்றையதினம் தனது அனைத்து பொறுப்புக்களையும் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசனிடம் ஒப்படைத்துள்ளார். 

இன்றையதினம் யாழ்ப்பாணம் மாநகர சபையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே து.ஈசன் இந்தத் தகவலை வெளியிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதனால், இன்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து தனக்கு கீழ் உள்ள அதிகாரங்கள் அனைத்தையும் பதில் முதல்வராக என்னிடம் ஒப்படைத்துள்ளார். 

மார்ச் மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முதல்வர் இ.ஆர்னோல்ட் ஒப்பமிட்டதன் பின்பும் தன்னுடைய அதிகாரங்களை கையளிக்காது இருந்தார். அதாவது அதிலே சொல்லப்பட்ட விடயம் என்னவென்றால் முதல்வர் முதல்வராகவே இருந்துகொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம், அந்த சட்டதிட்டங்கள் எங்களுக்கும் தெரியும் அவர் செய்ததும் சரியானது. 

இப்படியாக தொடர்ச்சியாக முதல்வர் செயற்படும் போது தேர்தல் திணைக்களத்தினால் மூன்று கடிதங்கள் மாநகர சபைக்கு வந்துள்ளது. உடனடியாக நீங்கள் விடுமுறையினை பெற்று உங்களுடைய கடமைகளை ஒப்படைத்து இந்த பணியை ஆற்ற உதவி செய்யுமாறு கேட்டு கடிதம் வந்துள்ளது. இதற்கமைவாக இரண்டு மாதங்களுக்கு பின்பு இன்றையதினம் பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். 

இந்த இடைப்பட்ட காலத்தில் முதல்வர் முதல்வராக செயற்பட்டது உண்மை, நான் பிரதி முதல்வராகத்தான் செயற்பட்டிருந்தேன். ஆனால் முதல்வர் எந்த விடயங்களை செய்ய வேண்டுமோ அந்த விடயங்களை செய்துவிட்டார். தன்னுடைய வாகனங்கள் உள்ளிட்ட சகலதையும் ஒப்படைத்துவிட்டு சென்றிருந்தார். 

அதற்கு பின்பு உறுப்பினர்கள் அடுத்து நீங்கள் தானே என்ன செய்யப் போகின்றீர்கள் என என்னை கேட்பார்கள். ஆனால் முதல்வர் முதல்வராக இருந்த காரணத்தினால் என்னால் சில செயற்பாடுகளை செய்வதற்கு பல தடைகள் இருந்தது. 

உதாரணமாக ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த போது மக்களுக்கு செய்ய வேண்டிய தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட சகல ஏற்பாடுகளையும் உன்னிப்பாக பார்த்து செய்திருந்தேன். நீங்கள் அறிந்திருப்பீர்கள் முதன் முதலில் நிவாரண பணியை மாநகரத்தில் ஆரம்பித்து வைத்தது நான்தான். இந்த நிவாரண பணிகளை முன்னெடுக்கும் போது பொலிஸாருக்குத் தெரியும் நான் பிரதி முதல்வர் என, ஆனால் சிறப்பு அதிரடிப் படையினருக்கோ, இராணுவத்திற்கோ தெரியாது. 

நான் என்னுடைய மோட்டார் சைக்கிளில் செல்லும் போது எனக்கு பல தடைகள் ஏற்பட்டன. பெரும் சிரமத்தின் மத்தியில்தான் நான் இவ் விடயங்களை செய்து முடித்தேன். இந்த விடயம் எனக்கு மனத் தாக்கத்தை ஏற்படுத்தியது, 

23 மாநகர சபைகளில் 22 மாநகர சபைகளில் பிரதி முதல்வருக்குரிய வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சட்ட சிக்கல்கள் காரணமாக செய்ய முடியவில்லை. அது ஒரு துரதிஸ்டம். தற்போது முதல்வர் எனக்கு முழுமையான அதிகாரங்களை ஒப்படைத்துள்ளார். இனிவரும் காலங்களிலே கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து மாநகர மக்களுக்காக சேவையாற்ற தோழமையுடன் கைகோர்த்து செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment