(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்காக சுதேச மருத்து மற்றும் சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்டுள்ள விசேட செயலணிக்கான மீளாய்வுக்குழு இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் கூடியது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது இந்த விசேட செயலணிக்கான மீளாய்வுக்குழு மருத்துவ நிர்வாகிகள், நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட 35 உறுப்பினர்களைக் கொண்டதாகும். அத்தோடு இக்குழு இரு தினங்களுக்கு ஒரு முறை அமைச்சர் வன்னியாராச்சி தலைமையில் கூடும்.
இதன்போது நோயாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனை முறைமைகள், சிகிச்சை முறைமைகளை மேலும் வலுப்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதோடு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து பொருட்களை பெற்றுக் கொள்ளல், பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதோடு மக்களின் வாழ்க்கை நடைமுறைகள், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் அல்லது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக உரிய சுகாதார ஆலோசனைகளை வழங்குதல், வைத்திய பராமறிப்பு சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல், சுகாதாரத்துறை ஊடாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப போக்குவரத்தை முன்னெடுத்தல், புதிய நோயாளர்களை இனங்காண்பதற்காக பரிசோதனைகளுக்குத் தேவையான உள்நாட்டு மருத்துவ பொருட்கள் மற்றும் பாகங்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுத்தல் என்பவை பற்றி அவதானம் செலுத்துமாறு இதன்போது அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment