(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்திலும், பெருந்தோட்டப் பகுதிகளிலும் திங்கட்கிழமை முதல் ஐக்கிய தேசிய கட்சியினால் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்பட வேண்டாம் என்று கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி அமைப்பாளர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவர் தமது ஆலோசனையில், உள்ளுராட்சி தொகுதிகள் அடிப்படையில் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அரசியல் இலாபம் பெறுவதற்கோ அல்லது அரசியலில் ஈடுபடுவதற்கோ முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
ஏதேனுமொரு உள்ளுராட்சி சபையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மற்றும் வைரஸ் பரவலுக்கு எதிராக சுகாதாரத்துறை எடுக்கும் நடவடிக்கைகளின் போதும் எவ்வித அரசியலும் இன்றி அனைத்து உறுப்பினர்களும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆலோசனைகளுக்கு அமைய வைரஸ் பரவல் தொடர்பில் அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான மேல் மாகாணத்திலும் மற்றும் பெருந்தோட்ட மக்களுக்காகவும் விசேட வேலைத்திட்டங்களை திங்கட்கிழமை முதல் முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினை பரிசோதிப்பதற்கான உபகரணங்களை போதுமானளவு கொள்வனவு செய்யுமாறும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment