(நா.தனுஜா)
கொரோனா வைரஸினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்ற சுகாதார மற்றும் பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பாராளுமன்றம் இயங்காத நிலையில் தற்போதைய காபந்து அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்புத் தேவைகளை கையாளுவதற்கு போதுமானவையல்ல என சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை தேசிய சமாதானப் பேரவை கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டி அதன் எஞ்சிய பதவிக்காலத்துக்கு செயற்படவைப்பதே நடைமுறைச்சாத்தியமான தெரிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா இன்று செவ்வாய்கிழமை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, கொவிட்-19 வைரஸின் விளைவாக இலங்கை முன்னென்றும் இல்லாத நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவசரகால அடிப்படையில் அரசாங்கம் உறுதியானதும் தீர்க்கமானதுமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
24 மணி நேர ஊரடங்கும் இதில் உள்ளடங்குகிறது. அந்த ஊரடங்கு இப்போது நான்காவது வாரத்திற்குள் பிரவேசிக்கிறது. சில பகுதிகளில் இடைவிடாது தொடர்ச்சியாக ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.
கொவிட்-19 வைரஸுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்தில் முன்னரங்கத்தில் நிற்பவர்களுக்கு குறிப்பாக, மருத்துவத்துறையினர், பாதுகாப்புப் படைகள், அரசாங்க சேவையில் உள்ளவர்கள் மற்றும் உணவு மற்றும் மருந்துவகைகள் விநியோகங்களில் ஈடுபடுகின்ற தனியார் துறையினர் உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்ற பிரிவினர் ஆகியோருக்கு தேசிய சமாதானப் பேரவை அதன் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தேசிய நலன்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் தலைமை கொடுக்கின் அரசியல் தலைமைத்துவம் பிரத்தியேகமான மெச்சுதலுக்குரியது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பு கட்டமைப்பு வரையறைக்குள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த அவற்றை ஒழுங்கமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நாம் நம்புகிறோம்.
குறிப்பாக இரு விடயங்கள் அக்கறைக்குரியவையாக இருக்கின்றன. முதலாவது, தற்போதைய பட்ஜெட்டின் கால கட்டம் ஏப்ரலில் 30 முடிவுக்கு வரும்போது புதிய ஒதுக்கீடுகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டிய தேவை பற்றியது. இரண்டாவது, பழைய பாராளுமன்றம் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்ட தினத்துக்கு (மாரச் 2) பிறகு 90 நாட்களுக்குள் (ஜூன் 2) புதிய பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பானதாகும்.
இந்த இரு அரசியலமைப்பு ரீதியான தேவைகளும் பொதுத் தேர்தலுக்கு முன்னரான காலகட்டத்தை மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்பட்ட காபந்து அரசாங்கத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டவையாகும்.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களினால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் பொதுத் தேர்தலை உரியகாலத்துக்கு முன்கூட்டியே நடத்துவதில் உள்ள ஆபத்துக்களை அவர்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
கொரோனா வைரஸினால் தோாற்றுவிக்கப்பட்டிருக்கின்ற சுகாதார மற்றும் பொருளாதார அச்சுறுத்தல்களின் பின்புலத்தில், பாராளுமன்றம் ஒன்று இயங்காமல் தற்போதைய காபந்து அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு ரீதியான தேவைகளைக் கையாளுவதற்கு போதுமானவையல்ல.
இத்தகைய சூழ்நிலையில், பழைய பாராளுமன்றம் 2020 செப்டெம்பர் 1 வரையான அதன் எஞ்சிய 6 மாத பதவிக் காலத்தை நிறைவு செய்யும் வரை மீண்டும் கூட்டப்படுவதே மிகவும் பொருத்தமானதும் நடைமுறைச் சாத்தியமாானதுமான தெரிவாகும்.
மக்களின் சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்கின்ற சிக்கலான பிரச்சினைகளை கையாளுவதற்கு தேவையான சட்டங்களையும் பட்ஜெட்டையும் நிறைவேற்றுவதற்கும் ஊரடங்கை ஒழுங்கமைப்பதற்கும் அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவை வழங்கும் என்று தேசிய சமாதானப் பேரவை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.
No comments:
Post a Comment