(எம்.எப்.எம்.பஸீர்)
பொரளை பகுதியில் உள்ள அரச அச்சகத்தில் இன்று பிற்பகல் திடீர் தீ பரவல் ஏற்பட்டது.
இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 4 தீயணைப்பு வாகனங்களும் 20 தீயணைப்பு படை வீரர்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகேவிடம் வினவியபோது, அச்சகத்திலிருந்து அகற்றப்படும் ஆவணங்களை களஞ்சியப்படுத்தி வைக்கும் பகுதியிலேயே தீ ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தீ காரணமாக அச்சகத்திலிருந்து அகற்றப்படும் ஆவணங்கள் பல முற்றாக தீக்கிரையாகியுள்ளன. எனினும் அந்த களஞ்சியப்பகுதி தவிர ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தீயணைப்பு படையினரும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுப்படடுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், பொரளை பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment