கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 14, 2020

கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரர்

(எம்.எப்.எம்.பஸீர்) 

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரரான 41 வயதுடைய ரியாத் பதியுதீன் என அறியப்படும் மொஹமட் ரியாத் பதியுதீன் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டார். 

21.04.2019 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக அது குறித்த பிரதான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விஷேட குழு, நேற்று புத்தளம், மரிக்கார் வீதி பகுதிக்கு சென்று அவரது வீட்டில் வைத்து இரவு 7.00 மனியளவில் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். 

அத்துடன் 3 ஆம் குறுக்குத் தெரு, நியூ செட்டில்மன் வீதி, புத்தளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மற்றொரு சந்தேக நபரையும் இதன்போது சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். 

அதன்படி கைது செய்யப்பட்ட ரியாத் பதியுதீன் மற்றும் மற்றைய சந்தேக நபர் ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு - கோட்டையில் உள்ள 4 ஆம் மாடி என அறியப்படும் சி.ஐ.டி.யின் தலைமையகத்துக்கு நேற்று இரவோடிரவாக அழைத்து வரப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அவரிடம் அங்கு உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 

எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், தற்போது அது குறித்த விஷேட விசாரணைகள் சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையிலேயே அந்த விசாரணைகளின் ஒரு அங்கமாக தற்போது ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிகளுக்கு குண்டினை எடுத்துச் செல்லவும், குறித்த இடத்தை அடையவும் உதவி செய்து நெறிப்படுத்தியதாக கூறப்படும் இருவர் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டனர். 

கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் வைத்தும் கொத்தட்டுவ பகுதியில் வைத்தும் இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். 

கடந்த மார்ச் 29 ஆம் திகதி, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் வழி நடாத்தலில் செயற்பட்ட குழு, மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபரை அங்கு அழைத்துச் சென்று, அவரை வழி நடாத்தியுள்ளமை தொடர்பில் கல்கிசை பகுதியில் ஒருவரைக் கைது செய்தது. 

அவரிடம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் முக்கிய தகவல்கள் சில வெளிப்படுத்தப்பட்டுளன. 

அதன் பிரகாரமே சினமன் கிரான்ட் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியை நெறிப்படுத்தியவரை கொத்தட்டுவையில் வைத்தும், கொச்சிக்கடை தேவாலயம் மீதான தாக்குதல்தாரியை அங்கு அழைத்துச் சென்று நெறிப்படுத்தியமை தொடர்பிலான நபரை மட்டக்குளியில் வைத்தும் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். 

அவர்கள் இருவரிடமும் தற் சமயமும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை கண்டறியப்படாத பல்வேறு மர்மங்களுக்கு விடை கிடைத்துள்ளதாகவும், அவ்வாறானதொரு விசாரணையின் பின்னணியிலும் விஷேட பகுப்பாய்வின் அடிப்படையிலுமேயே ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 

மேலும், இச்சம்பவங்கள் தொடர்பில் சி.ஐ.டி.இன் 12 சிறப்பு குழுக்களும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment