சர்வாதிகாரத்திற்குள் பிரவேசிக்கும் அரசாங்கம், பாராளுமன்றைக் கூட்டாமலிருப்பதேன், பொது நிதி துஷ்பிரயோகம் செய்யப்படலாம் - எம்.ஏ.சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 14, 2020

சர்வாதிகாரத்திற்குள் பிரவேசிக்கும் அரசாங்கம், பாராளுமன்றைக் கூட்டாமலிருப்பதேன், பொது நிதி துஷ்பிரயோகம் செய்யப்படலாம் - எம்.ஏ.சுமந்திரன்

(எம்.மனோசித்ரா) 

நாட்டில் ஜனநாயக விழுமியங்களை மீறி, சர்வாதிகார நிர்வாக கட்டமைப்புக்குள் நுழையும் வகையிலேயே அரசாங்கத்தின் தீர்மானங்கள் காணப்படுகின்றன. அவ்வாறில்லை என்றால் இந்த தேசிய நெருக்கடியான நிலைமையில் பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பதற்கான காரணம் என்ன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதேவேளை கொரோனா ஒழிப்பு திட்டத்தின் கீழ் உலக நாடுகள் மற்றும் அமைப்புக்களால் வழங்கப்படுகின்ற நிதி குறித்து அரசாங்கத்தின் பயன்பாடுகளில் துஷ்பிரயோகம் செய்யப்படலாம். எனவே பொது நிதி நிர்வாகத்தின் வெளிப்படு தன்மையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

அரசாங்கம் பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளை புறக்கணிக்கனிப்பது தொடர்பிலும் கொரோனா ஒழிப்பிற்காக பல்வேறு வகையிலும் கிடைக்கப் பெறுகின்ற நிதி தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டால் மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. ஆனால் நெருக்கடியான நிலைமை ஏற்படும் போது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கூட்ட முடியும். அத்தோடு இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமான விடயம் தேர்தலை நடத்த முடியாது என்பதாகும். 

அரசியலமைப்பின் படி, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் புதிய பாராளுமன்றம் கூட வேண்டும். அதற்கமையவே மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எனினும் இந்த பொறுப்பினை அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழு மீது சுமத்தியுள்ளது. இந்நிலையில், இந்த குறிப்பிட்ட காலப் பகுதிக்கு இடையில் நாட்டில் ஏதேனும் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டால் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமனி அறிவித்தலை மீளப்பெற்று ஜனாதிபதியால் மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்ட முடியும். 

காரணம் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவது ஆபத்தானது என்பது அனைவரும் அறிந்ததொன்றாகும். ஆனால் மூன்று மாதங்களுக்கும் அதிகமாக பாராளுமன்றம் செயற்படாமலிருக்கவும் முடியாது. ஜனநாயக நாட்டில் பாராளுமன்றமே முக்கியமானதாகும். 

எனவேதான் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்று பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம். அதன் பின்னர் பொது சுகாதார நிலைப்பாட்டினைப் பெற்று மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிக்க முடியும். 

எனினும் பாராளுமன்றம் இன்றி தனது சர்வாதிகார ஆட்சியையே ஜனாதிபதி முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஜனநாயக நாடொன்றில் பாராளுமன்றம் இன்றிய ஆட்சியை அனுமதிக்க முடியாது. பாராளுமன்றமே ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமானதாகும். 

இதேவேளை கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு வகையில் நிதி கிடைக்கப் பெறுகிறது. அவ்வாறு கிடைக்கப் பெறுவது பொது நிதியாகும். பொது நிதியை முகாமைத்துவம் செய்வதற்கு பாராளுமன்றமே அனுமதியளிக்க வேண்டும். 

ஆனால் தற்போது பாராளுமன்றம் இல்லை என்பதால் பொது நிதி முகாமைத்துவம் துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது. பொது நிதி சட்டத்தை மீறி அதனைப் பயன்படுத்துகின்றனர். அத்தோடு பாராளுமன்றத்தை மழுங்கடிக்கும் வகையிலே அரசாங்கம் செயற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment