நாளை (30) காலாவதியாகவிருந்த அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் மே 31 வரை நீடிக்கப்படுவதாக பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயெ அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, துறைமுகம், கப்பல் நிறுவனம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு, சுகாதாரம், பெற்றோலியம், தொலைத்தொடர்பு, மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம், இலங்கை போக்குவரத்துச் சபை, புகையிரத சேவை, திறைசேரி, மத்திய வங்கி உள்ளிட்ட அரசாங்க மற்றும் தனியார் வங்கிகள், ஊடகங்கள் போன்ற அரச மற்றும் தனியார் பிரிவினரால் நடத்திச் செல்லப்படும் அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக தங்களின் நிறுவன அடையாள அட்டைகளை பயன்படுத்துவதற்காக ஏப்ரல் 30ஆம் திகதி வரை வழங்கப்பட்ட கால அவகாசம் மே 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அத்தியாவசிய சேவை மற்றும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் எதிர்வரும் மே 31 வரை நீடிக்கப்படுவதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊரடங்கு உத்தரவை மீறி நடந்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,649 ஆக அதிகரித்துள்ளதாகவும், கைப்பற்றிய மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10,741 ஆக அதிகரித்துள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலத்தில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 159 வாகனங்களை இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் பகல் வேளையில் தளர்தப்பட்டிருப்பதால், தற்போது கைது நடவடிக்கை குறைந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment