கொரோனா வைரஸ் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களை தமிழர் தாயகத்தினை மையப்படுத்தி ஸ்தாபிப்பதன் ஊடாக மற்றுமொரு இன அழிப்பினை செய்வதற்கு அரசாங்கம் விளைகின்றதா என முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர பொறியியலாளர் சண்.குகவரதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு இனம், மதம், மொழி கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம் என்பது மிக முக்கியமான விடயமாகும்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மருத்துவ கண்காணிப்பு நிலையங்கள் மட்டக்களப்பிலும் வவுனியா- பம்மைமடுவிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு நிலையங்களிற்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் விமான நிலைத்திலிருந்து நேரடியாகவே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதோடு தமது கடுமையான எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்தும் பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட மற்றும் சிலநாடுகளின் பிரஜைகளை உள்ளடக்கிய குழுவினரை அரசாங்கம் உடனடியாக வவுனியாவுக்கே அனுப்பியிருந்தது.
இவ்வாறு ஆட்சியாளர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் உடனடி தீர்வுகளை அடைவதற்காக தமிழர் தாயகமான வடக்கு கிழக்கினையே முதற்தெரிவாக கொள்கின்றனர்.
பொதுமக்களின் எதிர்ப்பினைக் காட்டுகின்றபோதும் அந்தநிலைப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படாது ஏதேச்சதிகாரமாக முடிவுகளை எடுக்கப்படுகின்றமையானது தமிழர் தாயகத்தின் பகுதிகள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகின்றதா என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது.
மேலும்,வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்துவதற்கு தற்போது செயற்பாட்டில் இல்லாத மத்தள விமான நிலையத்தினையும் அதனை அண்மித்த பகுதியொன்றில் கண்காணிப்பு மையத்தினையும் அமைப்பதற்கான ஏதுவான நிலைமைகள் இருக்கின்றபோதும் அதனை கருத்திலெடுக்காது அரசாங்கம் செயற்படுகின்றமையானது தொற்று நோயின் தாக்கம் தமிழர் தாயகத்தில் வலுப்பெற்று மீண்டுமொரு தடவை இன அழிப்பினை மேற்கொள்வதற்கான திரைமறைவு முயற்சியா என்ற சந்தேகங்கள் வலுவாக எழுகின்றன.
இவ்வாறான முகாம்களை அம்பாந்தோட்டையிலோ காலியிலோ அமைப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன். இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிப்பதற்கு தடுப்பு முகாம் தேவையெனில் அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களை அம்பாந்தோட்டை விமான நிலையத்திற்கு திருப்பி அங்கேயே தடுப்பு முகாமொன்றை நிறுவி பரிசோதனை செய்வதற்கான இலகுவான வழிவகை இருக்கும்போது எதற்காக வடக்கு கிழக்கை அரசாங்கம் தெரிவு செய்கின்றது என்பது இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா என எண்ணத்தோன்றுகின்றது” என தெரிவித்தார்.
No comments:
Post a Comment