நாடு முழுவதும் தற்போது அச்சத்தை உருவாக்கியுள்ள கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தை மக்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்ங்களில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒன்று திரண்டு கடைகளில் முண்டியடித்து பொருட்களைக் கொள்வனவு செய்வது ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டதற்கான நோக்கத்தையும் அதன் எதிர்பார்ப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், மக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் ஏனைய பகுதிகளைப் போல நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் சில மணி நேரம் தளர்த்தப்பட்டிருந்தது.
இந்த ஊரடங்கு சட்ட தளர்வு நேரத்தில் யாழ்ப்பாண மக்கள் சந்தைகளிலும் பலசரக்கு கடைகளிலும் பெருந்தொகையாக ஒன்று கூடியதானது மக்களின் பாதுகாப்புக்காக அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் அதன் நோக்கத்தை எட்டமுடியாது போனதாகவே உணர முடிகின்றது.
எனவே மனித உயிர்களை அச்சுறுத்திவரும் இந்த கொரோனா நோயிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் அவர்களது வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றது.
மக்கள் தமது வசிப்பிடத்திற்கு அண்மையாகவுள்ள இடங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாறாக வேறு பிரதேசங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்வதனாலேயே இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது என அறியமுடிகின்றது.
இந்நிலையில் எமது மக்கள் தம்மை நோக்கி வந்துள்ள இந்த கொடிய கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக தாங்களே முழுமையான ஒத்துழைப்பை அரசுக்கும் அத்தொற்றை தடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் தரப்பினருக்கும் வழங்க வேண்டும்.
ஊரடங்கு தளர்வு வேளையில் மக்கள் விழிப்புணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்காது கூட்டமாக கூடியதானது மிகுந்த வேதனையான விடயம். மக்களின் உணர்வுகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் கடும் நெருக்கடிகளையும் தான் உணர்ந்து கொள்வதாகவும் அதற்கு ஏற்ற வகையில் இவ்வாறான சன நெரிசலை கட்டுப்படுத்த ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதற்கு ஜனாதிபதி சம்மதம் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment