(ஆர்.விதுஷா)
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் கொரோனா வைரசின் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்த சமயத்திலும் கூட எமது ஆட்சியில் பொருளாதாரத்தை சிறந்த முறையில் நிர்வகிக்கக் கூடியதாகவிருந்தது.
ஆயினும் இந்த அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை சரிவர முகாமை செய்ய முடியவில்லை. பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களுக்கான சலுகைளை வழங்காது மாறுபட்ட கோணத்திலேயே செயற்பட்டுவருகின்றது.
எமது ஆட்சியின் போது மருந்துப் பொருட்களுக்கான பல சலுகைளை வழங்கியிருந்தோம். பல முக்கிய மருந்துப் பொருட்களை நோயாளிகளுக்காக இலவசமாக வழங்கியிருந்தோம்.
ஆயினும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து அனைத்து சலுகைளையும் இல்லாதொழித்துள்ளது. அவ்வாறாக நாம் முன்னெடுத்திருந்த அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சலுகைளை இந்த அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
இந்த நிலைமையை எதிர்கொள்ளக் கூடியதாக கடந்த 20 வருடங்களாக அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றத்தையே நாம் இப்பொழுது ஐக்கிய மக்கள் சக்தி யூடாக ஏற்படுத்தியுள்ளோம்.
அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருடைய ஆதரவும் கிடைத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment