(நா.தனுஜா)
கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்று சிறைக் கைதிகளுக்குள் பரவுவதைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கொவிட் - 19 வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பிருப்பதால் அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே இந்தக் கடிதத்தின் நோக்கமாக இருக்கின்றது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தாய்ச்சட்டமான 1996 ஆம் ஆண்டு 21 ஆம் சரத்தின் பிரகாரம் சுதந்திரத்தை இழந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமான விடயமாக உள்ளது.
நாட்டில் மிகவும் அதிக எண்ணிக்கையானோர் செறிந்து வாழும் இடமாக சிறைச்சாலைகள் காணப்படுகின்றன. அதன் காரணமாக சிறைக்கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோருக்கு மிக விரைவாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயம் உயர்வாகக் காணப்படுகின்றது.
சுதந்திரத்தை இழந்த சிறைக் கைதிகள் ஏனைய சாதாரண மக்களை விடவும் வலுக்குறைந்தவர்களாக இருக்கின்றார்கள். இந்நிலையில் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு நிலையங்களில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கைதிகளின் பிணை கோரிக்கைகள் மற்றும் அவர்களை சிறைச்சாலைகளில் தடுத்து வைத்தல் ஆகியன தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து ஏற்கனவே நாம் பிரதம நீதியரசருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறோம்.
அதேவேளை மிகவும் மோசமான சூழ்நிலைகளின் போது கைதிகளுக்கு பிணை வழங்குவது ஆட்சேபிக்கப்படக்கூடாது என்று சட்டமா அதிபருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் பரிந்துரைத்திருக்கிறோம்.
மேலும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் சிறைச்சாலைகளில் இருப்பவர்கள் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள், சிறைச்சாலைகளில் உள்ள மிகவும் வயது முதிர்ந்தோர் மற்றும் வேறு நோய்களினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டோர் போன்றோரை அனுமதிப்பத்திர நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளருக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம்.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடி நிலையில் குற்றவியல் நீதிப்பொறிமுறையின் கீழ் குற்றவாளிகளைத் தடுப்புக்காவலில் வைத்திருக்காத நடைமுறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்திருக்கிறது.
அதுமாத்திரமன்றி சிறைச்சாலைகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார், தாயுடன் தங்கியிருக்கும் பிள்ளைகள் மற்றும் வயது முதிர்ந்தோர் தொடர்பில் விசேடமாகப் பின்பற்றப்பட வேண்டிய கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதன் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனவே நாட்டின் தலைவர் என்ற வகையிலும் கொவிட் - 19 தடுப்பு செயலணியின் தலைவர் என்ற அடிப்படையிலும் இப்பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்மானமொன்றை மேற்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.
No comments:
Post a Comment