கொரோனா வைரஸ் தொற்றை அரசாங்கம் குறைத்து மதிப்பிடக்கூடாது - தேர்தலை விட தற்போது மக்களின் நலனை பாதுகாப்பதே முக்கிய விடயமாகும் - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

கொரோனா வைரஸ் தொற்றை அரசாங்கம் குறைத்து மதிப்பிடக்கூடாது - தேர்தலை விட தற்போது மக்களின் நலனை பாதுகாப்பதே முக்கிய விடயமாகும்

(செ.தேன்மொழி) 

கொரோனா வைரஸ் தொற்றை அரசாங்கம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இதனை தடுப்பதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்படும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சி என்ற வகையில் நாங்கள் முழு ஒத்துழைப்பபையும் பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணத்துங்க, பொது போக்குவரத்தில் செல்லும் பயணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கம் அதனை தடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

தற்போது வைரஸ் தொற்றுக்குள்ளாகிய ஐந்து நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம். 

அதேவேளை இந்த பாரிய நெருக்கடியை கருத்திற்கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை அளித்துள்ளமையை பாராட்டுவதுடன், நாம் இன்னும் இந்த வைரஸ் தாக்கத்தை சாதாரண விடயமாகவே கருதி செயற்பட்டு வருகின்றோம் என்றே எமக்கு தோன்றுகின்றது. 

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு குற்றஞ்சாட்ட நாங்கள் விரும்பவில்லை. எதிர்க்கட்சி என்ற வகையில் இவ்வாறான அவசரகால நிலைமையின் போது அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புகளை வழங்கி செயற்படவே நாங்கள் விரும்புகின்றோம். 

வைரஸை தடுப்பதற்காக அரசாங்கத்திற்கு நிதித் தேவைப்படின் அதனை பெற்றுக் கொள்வதற்கான பல வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் நாம் அவர்களுக்கு எமது ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம்.

விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்தாலும், இதில் மேலும் விருத்தி ஏற்படுத்த வேண்டும். வைரஸின் அவதான நிலைமையை கருத்திற் கொண்டு சில நாடுகள் அவர்களது நாட்டு விமான சேவையை ரத்து செய்துள்ளதுடன், உள்நாட்டுக்குள்ளே சில நகரங்களை முழுமையாக மூடப்பட்டுள்ளது. 

இதேவேளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளுக்கு தடை விதித்துள்ளது. இவற்றை கருத்திற் கொண்டு நாமும் எமது விமான சேவைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அதுமாத்திரமின்றி பொது வாகனங்கள் தொடர்பில் கட்டாயம் அவதானம் செலுத்த வேண்டும். பஸ் மற்றும் புகையிரத பயணிகள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள் என்பது தொடர்பில் சிந்தித்து பார்ப்பதுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

இலங்கையில் வெப்பநிலை அதிகம் எனவும். இங்குள்ள காலநிலைக்கமைய கொரோனா தொற்று தீவிரமாக பரவலடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உரிய தரப்பினர் விளக்கமாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறிக் கொண்டு இருப்பதால் வைரஸை கட்டுப்படுத்த முடியாது. வைரஸ் தொற்று தொடர்பான விடயங்களை மறைப்பதால் அதிலிருந்து தப்பிக் கொள்ள முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டாலே அதனை கட்டுப்படுத்த முடியும். 

எதிர்வரும் தினங்களில் சித்திரைப்புத்தாண்டு, உயிர்த்த ஞாயிறு தினம், வெசாக், பொசன் போன்ற பண்டிகை தினங்கள் வருவதால் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். மக்கள் தற்போதே பயத்தில் உள்ளனர். வர்த்தக நிலையங்களில் உணவுப் பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலை விட தற்போது மக்களின் நலனை பாதுகாப்பது முக்கியமான விடயமாகும். இந்த நிலைமையில் பணம் படைத்தவர்கள் தப்பிக் கொண்டாலும், சாதாரண மக்களே பெரிதும் பாதிப்படைவர்கள் இதனை கருத்திற் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என  அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment